வியாழன், 29 ஜனவரி, 2009

தமிழனே உனக்கு வீர வணக்கம்

மக்களே யோசியுங்கள்! முத்துக்குமார் எழுதிய கடைசிக்கடிதம்
இலங்கையில் ஈழத்தமிழர் பிரச்சனை முடிவுக்கு வரவேண்டும் என்பதை வலியுறுத்தியும், ஈழத்தமிழர்கள் படுகொலையை கண்டித்தும் தூத்துக்குடியை சேர்ந்த வாலிபர் முத்துக்குமார் என்பவர் சென்னை சாஸ்திரி பவன் அருகே இன்று(29.1.09) காலை 10.45 மணிக்கு (பாஸ்போர்ட் அலுவலகம்), ஈழத்தமிழர்களுக்கான ஆதரவான கோஷங்களை எழுப்பிக்கொண்டே மண்ணென்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.
உயிருக்கு போராடிய அவரை சிகிக்சைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது மருத்துவர்களிடம் பேசிய முத்துக்குமார், தீக்குளித்த தன்னை யாரும் காப்பாற்றி விடக்கூடாது என்பதற்காக, பெட்ரோல் கேனில் பெரிய அளிவில் ஓட்டை போட்டு, மண்ணென்ணெய்யை தன் மீது ஊற்றிக்கொண்டதாக தெரிவித்தார்.
இப்படி புத்திசாலித்தனமாக இருக்கும் நீ ஏன் தீக்குளித்தாய் என்று மருத்துவர்கள் கேட்டதற்கு, என்னைவிட புத்திசாலியான குழந்தைகள், சிறுவர்கள், வாலிபர்கள், பெண்கள் அனைவரும் இலங்கையில் கொல்லப்படுகிறார்கள். போர் முனையில் சிக்கித் தவிக்கிறார்கள். அவர்களை காப்பாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தித்தான் நான் தீக்குளித்தேன் என முத்துக்குமார் தெரிவித்தார்.
மேலும் பேசிய முத்துக்குமார் எங்கள் ஊரில் போருக்காக உயிர் தியாகம் செய்தவர்கள் அதிகம். உலக அமைதிக்காக போராடுபவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். 'கொள்கை நல்லூர்' என்றே எங்கள் ஊரை சொல்லுவார்கள் என்றார். அந்த ஊரில் பிறந்த நான் ஈழத்தமிழர்களுக்காக உயிர் விடுவதில் மிகவும் சந்தோஷப்படுகிறேன் என்றார்.
இன்று காலை முத்துக்குமார் தூத்துக்குடியில் இருக்கும், தனது தந்தை குமரேசனிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது குடும்பத்தாரின் நலம் பற்றி விசாரித்த முத்துக்குமார், தீக்குளிக்கும் சம்பவம் பற்றி தனது தந்தையிடம் எதுவும் பேசவில்லை என்று தெரிவித்தார்.
26 வயதான முத்துக்குமார், இலங்கை தமிழர்களுக்காக சென்னையில் எங்கு கூட்டம் நடந்தாலும், தவறாமல் கலந்து கொள்வார். பத்திரிக்கையில் தட்டச்சு பணியில் இருந்தாலும், தமிழ் உணர்வுள்ளவர் என்றும், ஈழத்தமிழர்களைப் பற்றி அன்றாடம் வேதனையுடன் பேசி வந்தவர் என்றும் முத்துக்குமாருடைய நண்பர்கள் தெரிவித்தனர்.
ஈழத்தமிழர்களுக்காக உயிர்த்தியாகம் செய்திட்ட இந்த தமிழர், ஈழப்பிரச்சனை குறித்து கடைசியாக எழுதிய கடிதம் இதோ:
விதியே விதியே என்செய நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை...
அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே...
வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன்.
உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன்.
வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த இரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம். இந்தியாவின் போர் நியமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்?
ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்ற சொத்தை வாதத்தை வைத்துக்கொண்டு, சில தனிநபர்களின் பழிவாங்கல் சுயநல நோக்கங்களுக்காக ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கிறது இந்திய அதிகார வர்க்கம்.
ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப் புலிகள் மட்டும் குற்றம் சாட்டப்படவில்லை. தமிழக மக்களையும் குற்றவாளிகள் என்று குற்றம் சாட்டியது ஜெயின் கமிஷன் அறிக்கை. அப்படியானால் நீங்களும் ராஜீவ் காந்தியைக் கொலை செய்த கொலைகாரர்கள்தானா?
ஜாலியன் வாலாபாக்கில் வெள்ளையன் கொன்றான் என்றார்களே, இவர்கள் முல்லைத்தீவிலும் வன்னியிலும் செய்வதென்ன? அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா? கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள். உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா? ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை, கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் மிகப்பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்க போகவில்லை என்பது போன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன.
மக்களே யோசியுங்கள். இவர்கள்தான் உங்கள் தலைவர்களா? பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? அப்படி பாய்ந்தால் யார் நம் பக்கம் இருக்கிறார்கள்?
கலைஞர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அறிவிப்பார். பிறகு, மத்திய அரசைப் புரிந்துகொள்வார்(?!). பிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார் .இந்த மாதம், இந்த வாரம், இதுவரைக்கும் என்னை எவனும் தொட்டதில்ல என்கிற வின்னர் பட வடிவேல் காமெடியைப் போல.
காகிதம் எதையும் சாதிக்காது மக்களே! இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர், மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார். தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன? ஒருமுறை அவரே சொன்னார், ''தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பா"னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே நக்கியிருப்பார் போலிருக்கிறேதே...
பட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே...உங்கள் போராட்டம் வெற்றிபெற சக தமிழனாக நின்று வாழ்த்துகிறேன். உங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். ஈழத் தமிழர் பிரச்சினை என்றில்லை, காவிரியில் தண்ணீர் விடச்சொல்லும் போராட்டமென்றாலும் சரி, தமிழ்நாட்டிற்கு ஆதவரான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்களும், வழக்கறிஞர்களும்தான். இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான்.
உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழி வகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம். உலகம் முழுக்க மக்களுக்கான புரட்சிகரப் போராட்டங்களில் முன்னிலை வகித்தது மாணவர்கள் என்கிற ஜாதிதான். அதேபோல், தமிழ்நாட்டிலும் உங்களுக்கு முந்திய தலைமுறையொன்று இதுபோன்ற ஒரு சூழலில், இதுபோல் குடியரசு தினத்திற்கு முன்பு களம் கண்டுதான் காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடித்தது.
ஆக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணம் உங்கள் கைகளுக்கு மறுபடியும் வந்து சேர்ந்திருக்கிறது. பொதுவாக உலக சரித்திரத்தில் இப்படியெல்லாம் நடப்பதில்லை. கடந்த முறை நடந்ததுபோல், உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டு விடாதீர்கள். போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது. அந்த மரபை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம்.
உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள். உண்மையில், இலங்கையில் இந்திய இராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கெதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது.சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர்கள் அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள்! விடுதலைப் புலிகளை ஒடுக்குவதற்கான சிங்கள வன்முறை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வடகிழக்கு மாநிலப் போராளிகளிடம் பயன்படுத்திக் கூர் பார்த்தார்கள்!போதாதற்கு, ஹைட்டியில் சமாதானப் பணிக்காக அனுப்பப்பட்ட ஐ.நா.வின் இராணுவத்திலிருந்து இந்திய மற்றும் இலங்கை இராணுவம் அவரவர்களுடைய பாலியல் நடவடிக்கைகளுக்காக அடித்துத் துரத்தப்பட்டிருப்பதிலிருந்து என்ன தெரிகிறது.இந்தக் கூட்டணி கொள்கைக்கூட்டணியல்ல, பாலியல் கூட்டணி என்றல்லவா!, ஆக இந்திய இலங்கை இராணுவக் கூட்டு என்பது இந்தியர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கும் கூட எதிரானதாக இருப்பதால், அகில இந்திய அளவில் மாணவர்கள், ஜனநாயக அமைப்புகளையும் உங்கள் பின்னால் திரட்டுங்கள்.
இதையெல்லாம் மக்களே செய்ய முடியும். ஆனால், அவர்கள் சரியான தலைமை இல்லாமல் இருக்கிறார்கள். உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்குகள். உங்கள் போராட்டத்தை சட்டக்கல்லூரி மாணவர்கள் என்ற இடத்திலிருந்து அனைத்து மாணவர்கள் என்று மாற்றுங்கள். உங்களிடமிருக்கும் வேகமும், மக்களிடமிருக்கும் கோபமும் இணைந்து தமிழக வரலாற்றை அடியோடு மாற்றட்டும். ஆட்பலம், பணபலம், அதிகார வெற்றியை உடைத்து எறியுங்கள்.உங்களால் மட்டுமே இது முடியும். ‘நாங்கள் தமிழ் மாணவர்கள், தமிழ்நாட்டின் உயிரானவர்கள், இங்கு தமிழினம் அமைதி கொண்டிருந்தால் ஏடுகள் தூக்கி படிப்போம். எங்கள் தமிழர்க்கு இன்னல் விளைந்தால் எரிமலையாகி வெடிப்போம்’ என்ற காசி அனந்தனின் பாடலை ஓர் அறிவாயுதமாக ஏந்துங்கள்.. என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள்.எனக்கு சிகிச்சையோ, போஸ்ட்மார்டமோ செய்யப்போகும் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்களே.. உங்கள் கையால் அறுபட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். காரணம், அகில இந்திய அளவில், மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்சாதி மாணவர்கள் போராடிக்கொண்டிருக்க, தன்னந்தனியாக நின்று, மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராடியர்களல்லவா நீங்கள்? எனக்கு செய்வதெல்லாம் இருக்கட்டும். நம் சகோதரர்களான ஈழத் தமிழர்களுக்கு உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?
தமிழீழம் என்பது தமீழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட. உலகில் ஆடு, மாடுகளைப் பாதுகாப்பதற்குக் கூட சட்டமும், அமைப்புகளும் இருக்கின்றன. இராமேஸ்வரம் தமிழனும், ஈழத் தமிழனும் மாட்டைவிட, ஆட்டைவிடக் கேவலமானவர்கள்?எல்லை தாண்டி போகும் மீனவர்கள், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு வருவதாக இந்திய மீடியா திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இவர்களெல்லாம் செய்தித்தாளே படிப்பதில்லையா? சென்னையின் கடற்கரைகளில் அடிக்கடி தைவான் நாட்டை சேர்ந்த மீனவர்கள் வழிதெரியாமல் வந்தவர்கள் என்று கைது செய்யப்படுகிறார்கள்.பல ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் தூரத்திலிருக்கும் தைவான் மீனவன் வழிதவற முடியுமாம், வெறும் பன்னிரெண்டு மைல் தூரத்திற்குள் இராமேஸ்வரம் தமிழன் வழி தவறுவது நம்புவது மாதிரியில்லையாம்!
தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதர்களே...
உங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும், பாதுகாப்போடும் வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என்பது உங்களுக்கு அனுபவத்தால் தெரிந்திருக்கும். நாங்கள் இன்று பெரும் இக்கட்டை எதிர்நோக்கியிருக்கிறோம். ஈழத்திலிருந்தும் எங்கள் சகோதரர்கள் இந்தியர் என்னும் நம் பெயரைப் பயன்படுத்தித்தான் நம் அரசால் கொலை செய்யப்படுகிறார்கள்.இந்தப் போராட்டத்தில் நாங்கள் தனித்துவிடப்படுவதை இந்திய அரசு விரும்புகிறது. அப்படி ஆக்கக்கூடாதென நாங்கள் விரும்புகிறோம். ஆகவே, போராடிக்கொண்டிருக்கும் எங்கள் சகோதரர்களுக்கு உங்கள் ஆதரவும் உள்ளதென மத்திய அரசுக்குத் தெரியப்படுத்துங்கள். அரசுகளில் அங்கம் வகிக்கக்கூடிய உங்கள் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களை எம் கரத்தை பலப்படுத்துவதோடு, எதிர்காலத்தில், ஒரு நவநிர்மாண் சேனாவோ, ஸ்ரீராம் சேனாவோ தமிழ்நாட்டில் உருவாகவிருக்கும் ஆபத்தைத் தவிர்க்கும் என்பது என் கருத்து.
தமிழ்நாடு காவல்துறையிலிருக்கும் இளைஞர்களே...
உங்கள் மீது எனக்கு இருக்கும் மதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல, காரணம், தமிழுக்காக மற்றவர்கள் என்ன செய்தார்களோ, அலுவலர்களை ஐயா என அழைப்பது போன்ற நடைமுறை ரீதியில் தமிழை வாழ வைத்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள்தான். மக்களுக்காகப் பாடுபடவேண்டும், சமூக விரோதிகளை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதுபோன்ற உன்னத நோக்கங்களுக்காகத்தான் நீங்கள் காவல்துறையில் இணைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால், அதை செய்ய விடுகிறதா ஆளும் வர்க்கம்? உங்களை சிறுசிறு தவறுகள் செய்ய விடுவதன் மூலம் தன்னுடைய பெருந்தவறுகளை மறைத்துக்கொள்ளும் அதிகார வர்க்கம், உங்களை, எந்த மக்களுக்காகப் பாடுபட நீங்கள் விரும்பினீர்களோ, எந்த மக்களுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று தீர்மானித்தீர்களோ, அந்த மக்களுக்கெதிராகவே, பயிற்றுவிக்கப்பட்ட அடியாள்களாக மாற்றுகிறது. டெல்லி திகார் ஜெயிலைப் பாதுகாப்பது தமிழக பொலிஸ்தான். இந்தியாவில் பழமையான காவல்துறையான தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறைகளில் ஒன்று. ஆனால் அந்த மதிப்பை உங்களுக்குக் கொடுக்கிறதா இந்திய அரசாங்கம்! மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமிழகம் வந்து திரும்பிப்போகையில், சென்னை விமான நிலையத்தில், அவருக்கான பாதுகாப்பை வழங்க அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள் மத்திய காவல் அதிகாரிகள்.
ஏனென்று கேட்டதற்கு, ராஜீவ் காந்தியை நீங்கள் பாதுகாத்த லட்சணம் தான் தெரியுமே என்று கிண்டல் செய்திருக்கிறார்கள். ராஜீவ் காந்தியைத் தமிழக காவல்துறையால் காப்பாற்ற முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை, ராஜீவோடு இறந்தவர்களில் பலர் அப்பாவி பொலிஸ்காரர்கள் என்பது. உங்கள் அர்ப்பணிப்புணர்வு கேள்விக்காப்பாற்பட்டது. ஆனால் மேற்படி வெண்ணெய் வெட்டி வீரரர்கள் அதுதான், இந்திய உளவுத்துறை ராஜீவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற தகவலை அறிந்தபோதும் மெத்தனமாக இருந்தது என்பது பின்னர் அம்பலமானதல்லவா... இதுவரை காலமும் நீங்கள் அப்பாவி மக்களுக்கெதிராக இருந்தாலும் தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றாகத்தான் இருக்கிறீர்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தஇந்த தருணத்தில், நீங்கள் மக்கள் பக்கம் இருந்தால் மட்டுமே மக்களிடம் இழந்திருக்கிற பெருமையை மீட்டெடுக்க முடியும். ஒருமுறை சக தமிழர்களுக்காக அர்ப்பணித்துப் பாருங்கள். மக்கள் உங்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவார்கள். தமிழனின் நன்றி உணர்ச்சி அளவிடற்கரியது. தன்னுடைய சொந்தக்காசை வைத்து அணை கட்டிக்கொடுத்தான் என்பதற்காகவே அவனுக்கு கோயில் கட்டி. தன் பிள்ளைகளுக்கு அவன் பெயரை வத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான் முல்லையாற்றின் மதுரை மாவட்டத் தமிழன். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கொந்தளிக்கப் போகும் தமிழகத்தில், மத்திய அரசு அதிகரிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது, ரா, சி.பி.ஐ போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களை உள்ளூர் மக்களுக்கு அடையாளம் காட்டுவதும்தான். இதை மட்டுமாவது செய்யுங்கள். மற்றதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.
களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதைலைப் புலிகளே...
அனைத்துக்கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த் தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே... ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான். தமிழகத்திலிருந்து அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம் அதுவரை, புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள். 1965 இல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரை சில சுயநலமிகளின் கையில் ஒப்படைத்ததால்தான் தமிழக வரலாறு கற்காலத்திற்கு இழுபட்டுள்ளது. அந்தத் தவறை நீங்கள் செய்து விடாதீர்கள்.
அன்பிற்குரிய சர்வதேச சமூகமே, நம்பிக்கைகுரிய ஒபாமாவே,
உங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இறையான்மை கொண்ட ஒரு குடியரசு தம் குடிமகனை இன ஒதுக்கல் மூலமாக கொடுமைப்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.வசதிக்காக அமெரிக்காவின் கடந்த காலத்தையே எடுத்துக்காட்டாக சொல்லலாம். உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை மாவீரன் முகமதலி சொன்னானே, என் சருமத்திலிருக்கும் கொஞ்ச வெண்மையும் கற்பழிப்பின் மூலமாகவே வந்திருக்குமென்று... நீங்கள் அமைதியாக இருக்கும் வரை இந்தியா வாயே திறக்காது. ஒட்டுமொத்த தமிழர்களும் அழிக்கப்பட்ட பிறகு வேண்டுமானால் அது நடக்கும். அதுவரை, இந்தியாவின் வாயைப் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா?
வன்னியில், விடுதலைப் புலிகளூக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்காள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள்? இது ஒன்று போதுமே, தமிழ்மக்கள் விடுதலைப் புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு.இது இனப்படுகொலை இல்லையா? இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக, இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொள்கின்றனரென்றால். நீங்கள் உங்கள் மெளனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை? ஆயுதம் தாங்கி போராடுவதால் மட்டுமே யாரும் தீவிரவாதியாகிட மாட்டார்கள். அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார். மறத்திற்கும் அஃதே துணை என்று பாடியுள்ளான் எங்கள் திருவள்ளூவர்.
புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிறார் ஜெயலலிதா என்னவோ பிரச்சினையே புலிகள் ஆயுதம் அடுத்ததால்தான் வந்தது என்பதைப் போல.. உணமையில், புலிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தவிர, காரணகர்த்தாக்கள் அல்லர் இந்திய அரசு இந்தப் பிரச்சினையில் ஈடுபட்டிருப்பது வெளிப்படையாகாத வரை, இலங்கைப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை. அதில் தலையிட முடியாது என்றது. சீனா, பாகிஸ்தான் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையில் ஆதிக்கம் பெறுவதைத் தடுப்பதற்காக செய்வதாகச் சொன்னது.
நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய, மும்பை தொடர் வெடிகுண்டுகள், பிறகு அண்மையில் நடந்த தாக்குதல் எனப் பலவாறாக இந்திய மக்களைக்கொன்று குவித்த பாகிஸ்தானோடு இணைந்து கொண்டு தமிழர்களைக் கொண்று குவிக்கிறது. அப்படியானால், பாகிஸ்தானின் இந்திய மீதான பயங்கரவாதமென்பது இந்தியாலிபாகிஸ்தான் இருதரப்பு அதிகார வர்க்கங்களும் தங்கள் மக்களைச் சுரண்ட பரஸ்பர புரிதலுடன் உருவாக்கிக் கொண்ட ஒன்று என்ற எம் சந்தேகம் ஒருபக்கம் இருக்க, இப்போது, விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள் அதனால்தான் சண்டை என்கிறது.
ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்கிறது. ராஜீவ் காந்தி ஒரு கவுன்சிலரோ, மாவட்டச் செயலாளரோ அல்ல. அவரை ஏற்கனவே ஒருமுறை கொலை செய்யும் முயற்சி இலங்கையில் நடைபெற்றிருந்த போதும் அந்தக் கொலைகாரன் விசாரிக்கப்படவில்லை. ராஜீவ் காந்தியைக் கொல்ல முயன்ற அந்த சிங்கள வீரன் ஆகியோரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இணைத்துக்கொண்டு மறுபடியும் விசாரிக்கப்பட வேண்டும் என்பது என் கோரிக்கைகளில் ஒன்று.
ராஜீவ் மீது புலிகளுக்கு வருத்தம் இருந்திருக்கலாமே தவிர, கோபம் இருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், ராஜீவ் இந்திராவின் புதல்வர். இந்திரா, தமிழீழத்தின் சிறு தெய்வங்களில் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்திலிருப்பவர்.
இந்தியா சொல்லும் காரணங்கள் அடிக்கடி மாறுவதிலிருந்தே இந்தியா நியாயத்திற்குப் புறம்பாகத்தான் இந்தப்போரில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் நீங்கள் ஏன் நேரடியாகத் தலையிடக்கூடாது? புலிகள் போர் நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஆயுதம் குவிக்கிறார்கள் என்றது இலங்கை.சந்திரிகாவோ, ரணிலோ, மகிந்தாவோ கடந்த காலங்களில் ஒரு கடவுளாக அல்ல, மனிதர்களாகக்கூட நடந்துகொண்டதில்லை. இவர்கள் ஒரு நிர்ப்பந்தத்தின் பெயரில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுவிட்டார்கள் என்பதால் மட்டுமே போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும். புனரமைப்புப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று எதிர்பார்ப்பது என்னவகை நியாயம்? தாங்கள் நேர்மையாக நடந்துகொள்வோம் என்ற நம்பிக்கையை உண்டாக்குவது மூலமாக மட்டுமே போராளிகளைலிஆயுதத்தைக் கீழே வைக்கச்செய்ய முடியும். கடந்த கால அரசுகள் எவையும் அப்படி செயல்படவில்லை.
உதாரணம் ரணில், கருணா. ஆனால், புலிகள் போர் நிறுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு செய்தது ஆயுதம் வாங்கியது மட்டுமல்ல, அது காலாகாலமாக நடப்பதுதானேலி ஓர் அரசு நிர்வாகத்தையே உருவாக்கியுருக்கிறார்கள். சர்வதேசத்தின் கண்களில் இது தீவிரவாதமா?
அப்பாவித் தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாக பசப்புகிறது இந்தியா. ஆயுத தளபாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம்.இந்த லட்சணத்தில், தமிழீழ மக்களுக்கான வசதிகளை இலங்கை அரசு செய்யுமாம். அதற்கு இந்தியா உதவுமாம்... வேலிக்கு ஓணான் சாட்சி! இப்போது சர்வதேச செஞ்சுலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ்களைத் தாக்கினார்களே, அவர்களும் விடுதலைப் புலிகளா? பிரான்சின் 17 மனித உரிமையாளர்களைக் கொலை செய்தார்களே, அவர்களும் விடுதலைப் புலிகளா?சீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு விமானங்கள், பாகிஸ்தானின் ஆர்டிலரிகள் மட்டுமல்ல... இப்போது எம்மக்களைக் கொலைசெய்து வருவது சர்வதேச சமூகத்தின் மெளனமும்தான் என்பதை எப்போது உணர்வீர்கள்லிநியாயத்தின்பால் பெருவிருப்பு கொண்ட ஒரு மக்கள் சமூகம் பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பிறகா? அபாரிஜின்கள், மாயா, இன்கா வரிசையில் நாங்களும் சேர்க்கப்படுவது உங்கள் நோக்கமென்றால், எங்கள் பழங்கதைகள் ஒன்றின்படி ஒவ்வொருநாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்து கொள்கிறோம்... எங்கள் சகோதரிகளையும், குழந்தைகளையும் விட்டுவிட்டுச் சொல்லுங்கள். தாங்க முடியவில்லை. அவர்களெல்லாம் மனமார சிரிப்பதை ஒருநாள் பார்ப்போம் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் போராடிக் கொண்டிருப்பதே. ஒரு பேச்சுக்கு ஒத்துக்கொள்வதென்றாலும்கூட, விடுதலைப் புலிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றாலும் அப்படி ஒரு தண்டனையை வழங்கும் யோக்கியதை இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ கிடையாது.
காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியை விடக் கொடுமையானது.
1. இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார் போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். இலங்கையோடு இந்தியா அரசு நடந்தும் முக்கியத்துவமற்ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.
2. ஐ.நா. பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது.
3. இலங்கை அரசு எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள் மீது தடை விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும் அதன் உறுப்பினர்கள் எதுவித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.
4. புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.
5. புலிகளோடு தொடர்புடையது என்னும் குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தக்க நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும்.
6. ராஜீவ் காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம் காணப்பட வேண்டும்.
7. பிரணாப் முகர்ஜி, கோத்தபாய ராஜபக்க்ஷே, சந்திரிகா, உதயணகார, கேகலிய ரம்புக்வெல, பசில்ராஜப்க்ஷ மகிந்த, பொன்சேகா போன்றோர் நார்கோ அனிலிசிஸ் சோதனைக்குப்பட வேண்டும்.
8. அமைக்கப்படபோகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுகே சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழீன மக்கள் தான் முடிவுசெய்வார்கள்.
9. புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்து வந்த தாக்குதல், எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள் தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும் இந்த விசயத்தில் மலையக மக்களின் முடிவே இறுதியானது.
10. சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்கும் இலங்கைக்குத் தப்பிச்சென்று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக பொலிசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
11. பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.
12. தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.
13. தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத் தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.
14. சுட்டுக்கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.
என்றும் அன்புடன்,
அநீதிகளுக்கெதிரான
உங்கள் சகோதரன்,கு.முத்துக்குமார், கொளத்தூர், சென்னைலி99
அருமைத்தமிழ் மக்களே, அநீதிகளுக்கெதிரான போராட்டத்தில் நம் சகோதர்களும், பிள்ளைகளும் அறிவாயுதம் ஏந்தியிருக்கிறார்கள். நான் உயிராயுதம் ஏந்தியிருக்கிறேன். நீங்கள் நகலாயுதம் ஏந்துங்கள். ஆம், உங்கள் கையில் கிடைத்திருக்கும் இந்தத் துண்டறிக்கையை நகலெடுத்து, உங்கள் நண்பர்கள், உறவினர்கள், மாணவர்கள் வசம் கொடுத்து, போராட்டத்திற்கான ஆதரவைப் பெருகப் பண்ணுங்கள் நன்றி.

செவ்வாய், 27 ஜனவரி, 2009



Posted by Picasa



Posted by Picasa



Posted by Picasa

புதன், 21 ஜனவரி, 2009

"கேள்விக் கேட்டக் தெரிந்த வரலாற்று நாயகன்"

இரண்டாயிரத்தி ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னால் கிரேக்கில், ´ஆதென்ஸ்´ என்ற இடத்தில் வாழ்ந்தவர் சாக்ரடீஸ். இவரைப் பற்றி வரலாற்றில் ஒரு மதிப்பிடு உண்டு. "கேள்விக் கேட்டக் தெரிந்த வரலாற்று நாயகன்" என்பார்கள். சொல்லுவதை அப்படியே நம்பிக் கொண்டு, அவை குறித்த தர்க்க விவாதங்கள் எதையும் செய்யாமல், அப்படியென்றால் என்னவென்றே தெரியாத மக்கள் கூட்டத்தில் சாக்ரடீஸ் வித்தியாசமாக இருந்தார். சமூக பழக்க வழக்கங்களை ஆராய்வதும், அரசு அமைப்பின் செயல்பாடுகளை விமர்சிப்பதும், எதிர் கேள்வியுமாக இருந்ததோடல்லாமல், நிறைய விவாதங்களுக்கென நேரம் ஒதுக்கி பேச ஆரம்பித்திருந்தார். இதென்ன பிரமாதம்! உட்கார்ந்து ஊர் கதை பேசிக்கொண்டு, இடக்கு மடக்கான கேள்விகளை கேட்டுக் கொண்டிருப்பது ஓர் ஆச்சரியமான விஷயமா? என்று நமக்கு தோன்றலாம். இன்றைய மனிதனின் அறிவை விட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதனின் சிந்தனையில் கேள்விகளுக்கோ, சிந்தனைகளுக்கோ இடமில்லை. அன்றைய மனிதனின் அறிவு அப்படி.நீதி, நியாயம், ஆத்மா, கடவுள், சமூகம், அரசு, சம்பிரதாயம் என எல்லாவற்றையும் ஆய்வுக்கு உட்படுத்தினார் சாக்ரடீஸ். அவரின் பேச்சுக்களும், புதிருக்கான விடைகளையும், நயத்துடன் எடுத்துப் பேசும் போது பொது மக்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தை கொடுத்தது. ஆதென்ஸ் இளைஞர்களுக்கு சாக்ரடீஸ் ஹீரோவாக இருந்தார். அந்த கேள்வி கேட்கும் பழக்கம் இளைஞர்களிடமும் தொற்றிக் கொண்டது. கிரேக்க சமூகத்தில் காலகாலமாக கடைப்பிடித்து வந்த மூடக்கொள்கைகளையெல்லாம் சாக்ரடீஸை சிந்திக்க வைத்ததல்லாமல், மெல்ல இளைஞர்களையும் மாற்ற ஆரம்பித்திருந்தது. ஆதென்ஸ் அரசுக்கு இந்த விஷயம் எட்டியது. சாக்ரடீஸ் மீது குற்றம் சுமத்திய ´அனைட்டஸ்´ என்பவன் ஓர் அரசியல்வாதி. நகரத்தில் இருக்கும் சொந்த தெய்வங்களை வணங்காமலும், அவை குறித்து தவறான விமர்சனங்களை செய்ததாகவும், சமய ஆச்சாரங்களின் ஒழுக்கங்களை கடைப்பிடிக்கத் தவறியதாகவும் - இளைஞர்களுக்கு மாற்று கருத்துக்களை புகுத்தி திசை திருப்ப முயன்று சமூகத்தின் பழக்க வழக்கங்களை கெடுக்க முயன்றதாகவும் குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டது. வழக்கை விசாரிக்க நீதிமன்றத்தில் ஐநூறு பேர்களுக்கும் மேல் நடுவர்களாக இருந்தார்கள். அக்காலத்தில் விசாரணைக்குரிய சட்டத்திட்டங்கள், சாட்சிகள், வாக்குமூலம், குறுக்கு விசாரணை போன்றவைகள் கிடையாது. அதிகாரங்கள் அரசியல்வாதிகளிடம் இருந்தது. அவர்கள் சொல்வதே சட்டநெறி. அப்படி இருக்கையில், அனைட்டஸ் அரசியல் செல்வாக்கு பெற்றவன். அவன் சாக்ரடீஸ் மீது பிராது கொடுத்திருக்கிறான். அந்த காலத்தில் சமயம் குறித்து தவறாக ஏதாவது ஓர் வார்த்தையை உபயோகித்தாலே தலையை வெட்டும் அளவுக்கு தண்டனை உண்டு. சாக்ரடீஸ் இளைஞர்களை திசை திருப்ப முற்பட்டார். சமயத்தை விமர்சித்தார் என்றால் சும்மா விட்டுவிடுவார்களா? அனைட்டஸ்க்கு சாக்ரடீஸ் மீது மிகுந்த பொறாமை இருந்தது. சாக்ரடீசின் பேச்சுத்திறமை, அறிவுத்திறமை அவர் பேசுவதை ´ஆ´வென வாய்யைப் பிளந்துக் கொண்டு கேட்டுக் கொண்டிருக்க ஒருபெருங் கூட்டமே இருந்தது. அரசியல்வாதிகளை குறித்து மக்களிடம் முன்பு இருந்த மரியாதையெல்லாம் சாக்ரடீசின் விவாதத்தால் தெளிவடைந்த மக்களிடம் மரியாதை இல்லாமல் போய்விட்டது. மக்களுக்குள்ளும் அரசியல்வாதிகளை குறித்து நக்கலாக பேசுவதும், ஏளனமாக பார்ப்பதுமாக மாறிப்போய்விட்டது. அரசின் செயல்பாடுகளில் இருந்த தில்லு முல்லுகளை குறித்தெல்லாம் பேச ஆரம்பித்துவிட்டனர். இவை நடந்த சில ஆண்டகளுக்கு பிறகுதான் இப்படியே விட்டால் கதை கந்தலாகிவிடும் என்று, அனைட்டஸ் அரசிடம் தவறான முறையில் போட்டுக் கொடுத்துவிட்டான். அரசுக்கு எதிராக மக்களையோ, அல்லது இளைஞர்களை சீரழிக்க வேண்டுமென்ற எண்ணமோ சாக்ரடீஸிடம் இல்லை. விவாதிப்பதை, சிந்திக்க வைப்பதை, அதன் மூலம் கேள்வி கேட்கும் அறிவை வளர்க்கவே சாக்ரடீஸ் முற்பட்டார். அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது. சாக்ரடீஸிடம் அன்பு கொண்டிருந்த மக்களும், நண்பர்களும் யாருக்கும் தெரியாமல் ஊரை விட்டு ஒடிப்போய்விடுங்கள் என்றனர். சாக்ரடீஸ் ஏற்றுக் கொள்ளவில்லை. ஒரு குடிமகனை விசாரிக்கும் தகுதி அரசுக்கு உண்டு. அப்படியிருக்க அவ்விதிமுறைகளை மீறி ஊரைவிட்டு போகும் அளவுக்கு நான் எந்த தவறும் செய்யவில்லை. அவ்வாறு செய்வதே கிரேக்க குடிமகனின் பெருங்குற்றமாகும் என்றார். என்ன நடந்தாலும் ஆதென்ஸ் நகரை விட்டு போகமாட்டேன் என்றார். விசாரணையில் பல தவறான பொய்யான பழிப்புகள் சாக்ரடீஸ் மீது சுமத்தப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுவிட்டது. சில நடுவர்கள் அத்தீர்ப்புக்கு ஆதரவாக இல்லை. பலருக்கு பொய்யான குற்றச்சாட்டுக்கள் சாக்ரடீஸ் மீது சுமத்தப்பட்டது என்பது தெரியும். இருப்பினும், அனைட்டஸ் அரசியல் செல்வாக்கு அவர்களை மிரட்டியது. தண்டனையும் கொடுத்தாகிவிட்டது. இனி அரசு தீர்ப்பையும் மாற்ற முடியாது. சாக்ரடீஸிக்கு ஆதரவான நடுவர்களுக்கு கண்கள் கலங்கின. சாக்ரடீஸ் அவர்களை பார்த்து சொல்கிறார் :"இந்த தீர்ப்பு எனக்கு பெரிய தீங்கானது இல்லை. இடையீடு இல்லாதபடி ஒய்வு எடுப்பதே மரணம். எனவே, அதில் கெடுதல் இருக்க முடியாது. நல்ல மனிதனுக்கு வரும் மரணம் அவனை இன்னொரு சிறப்பான வாழ்வுக்கு அவனை கொண்டு செல்கிறது என்பது என் நம்பிக்கை. அம்மறு உலகத்தில் இருக்கும் நடுவர்கள் இத் தவறான தீர்ப்பை அழித்து நான் குற்றமற்றவன் என்பதை வெளிப்படுத்துவார்கள். என்னைப் போல் நியாயமற்ற முறையில் அரசால் தண்டிக்கப்பட்ட புகழ்பெற்ற அமரர்களையும் சந்திக்கப் போகிறேன். அவர்களுடன் நான் விவாதத்தில் ஈடுபடுவேன். அவர்களை கேள்வி மேல் கேள்வி கேட்பேன். அங்கு கேள்வி மூலம் நிஜங்களை கண்டடைய தடையொன்றும் இருக்காது. உண்மையை கண்டடைய முற்படுபவனை அங்கு சிறையில் அடைத்து தண்டனை கொடுக்கவும் முடியாது. இத்தகைய அரிய வாய்ப்பை வழங்கிய ஆதென்ஸ் நடுவர் குழுவுக்கு நன்றி" என்கிறார். அவர் பேசி முடித்ததும், தண்டனையை நிறைவேற்றும் பொறுப்பை ஆதென்ஸ் அரசு பதினொருவர் அடங்கிய குழு ஒன்றிடம் ஒப்படைக்கப்படுகிறது. இருபத்தி நான்கு மணிநேரத்திற்குள் மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும். அப்போது, ஆதென்ஸ் நகரில் அப்பாலோ என்ற தெய்வத்தின் விழா நடைப்பெற்றுக் கொண்டிருக்கின்றது. அவ்விழாவில் ´அப்பாலோ´ தெய்வம் ஃடெலோஸ் என்றும் ஊரில் இருக்கும் திருத்தலத்திற்கு காணிக்கையாக பல பொருட்களை படகின் மூலம் திருத்தலத்திற்கு கொண்டு போய் காணிக்கையை கொடுத்துவிட்டு, அப்படகு திரும்பி ஆதென்ஸ் நகரத்திற்கு வரும் வரை அந்நகரில் இருந்து யாரும் வெளி ஊர்களுக்கு செல்ல மாட்டார்கள். அரசும் தண்டனைகளோ எதுவும் இருக்காமல் அவ்விழா நாட்களில் தெய்வத்தின் புனிதத்தன்மையை பாதுகாத்து வருவது ஐதீகமாக இருந்தது. காணிக்கை கொண்டு செல்லும் அப்படகை கூட மிகப் புனிதமாக பாதுகாத்து ´புனிதப்படகு´ என்று வழங்கி வந்தனர் என்றால், ஆதென்ஸ் மக்களின் அவ்விழா எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதி இருப்பர் என்பதை உணரலாம். சாக்ரடீஸிக்கு தண்டனை விதிக்கப்பட்ட போது, அப்பாலோ தெய்வத்தின் விழா நடந்துக் கொண்டிருக்கிறது. அப்பாலோவின் காணிக்கைகளை எடுத்துக் கொண்டு ஃடெலோஸ்க்கு சென்ற புனித படகு இன்னும் ஆதென்ஸிக்கு வரவில்லை. சாக்ரடீஸிக்கு தண்டனையை நிறைவேற்ற முடியவில்லை. புனிதப்படகு சரியான காலப்படி ஆதென்ஸிக்கு வந்து சேர்ந்திருக்க வேண்டும். ஆனால் காணவில்லை; என்னாயிற்று புனிதப்படகுக்கு என்ற கவலை ஒரு பக்கம். சரி சாக்ரடீஸை என்ன செய்வது? படகு வரும்வரை தற்காலிகமாக வெளியில் விடலாமா என்று யோசனை வந்தபோது சாக்ரடீஸிக்கு எதிராக இருந்தவர்கள் மறுப்பு தெரிவித்தனர். புனிதப்படகு வரும் வரை தண்டனையை நிறைவேற்ற முடியாவிட்டாலும் சிறையில் அடைத்து வைத்திருந்து புனிதப்படகு வந்தபின் தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்று தீர்மாணிக்கப்பட்டது. சிறைக்குள் அடைக்கப்பட்ட சாக்ரடீஸை பார்க்க மனைவி ஸாந்திப்பே, பிள்ளைகள், சில முக்கிய நண்பர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். சிறையில் சந்தித்த சில நண்பர்கள் சிறையில் இருந்து தப்பிச் செல்வதற்கு கட்டாயப்படுத்திய போதும் சாக்ரடீஸ் அதிருப்தியை வெளிப்படுத்தினார். இழிவான செயல் அவை என்றார். அவர் சொல்வதை கேட்காமல் அவரின் நண்பர்கள் தப்பிச் செல்வதற்கான எல்லா ஏற்பாடுகளையும் அவருக்கே தெரியாமல் செய்துவிட்டு, கடைசியில் வந்து சாக்ரடீஸை அழைத்துக் கொண்டு போக முற்பட்ட போது; முடியவே முடியாது என்று கண்டிப்போடு மறுத்துவிட்டார். "சிறைக் கைதி தப்பித்து ஓடுதல் சட்டத்திற்கு எதிரானவை. அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டால் என் சொந்த மனசாட்சே என்னை கொன்றுவிடும். என் மனச்சாட்சிக்கு எதிரான நடவடிக்கையை நான் எடுக்கமாட்டேன்" என்று தெளிவாக விளங்க வைத்த பின் தப்பி ஓடும் எண்ணத்தை நண்பர்கள் கைவிட்டனர். புனிதப்படகு ஒரு வாரம் வரையில் வானிலை கோளாறு காரணமாக குறிப்பிட்ட நாட்களுக்குள் வராமல் போய்விட்டது என்று குமுறிக் கொண்டு தரித்திரம் பிடித்த படகு ஆதென்ஸ் வந்து சேர்ந்தது. புனிதப் படகைக் கண்டதும் ஆதென்ஸ் மக்களுக்கு பதற்றமும், பயமும் பிடித்துக் கொண்டது. சாக்ரடீஸை நினைத்து அழுதனர். ஒரு நல்லவனுக்கு கிடைக்கப்போகும் கொடிய தண்டனையை நிறைவேற்றிவிடப் போகிறார்களே என்று ஆதென்ஸ் நகரத்தில் சோகம் பிடித்துக் கொண்டது. கடைசியாக மனைவி பிள்ளைகளுடன் சில மணித்துளிகள் பேச அனுமதிக்கப்பட்டனர். மாலை நேரம் பதினொருவர் குழுவின் தலைவன் சாக்ரடீஸை வந்து சந்திக்கிறார். கண்கள் கலங்குகிறது தலைவனுக்கு; சாக்ரடீஸை சோதிக்கிறார். மௌனமாக வெளிவே செல்கிறார்; அவரின் தலை அசைகளுக்கு அர்த்தம் புரிந்து கொள்ளப்படுகிறது. ´ஹெம்லாக்´ என்னும் கொடிய நஞ்சு உள்ள கோப்பையை சாக்ரடீஸிக்கு கொடுக்கப்படுகிறது.கிரேக்கர்கள் தாங்கள் உண்ணும் உணவில் சில துளிகளை தெய்வத்திற்கு அர்ப்பணம் செய்வது பழக்கமாக இருந்தது. ஆனால், அன்று சாக்ரடீஸ் உண்பதற்கு முன் சில துளிகளை தெய்வத்திற்கு சமர்ப்பணம் செய்யவில்லை. நஞ்சுவின் அளவு குறைவிடக் கூடாதல்லவா?சாக்ரடீஸின் உதவுகள் மெல்ல எதையோ சொல்லி முணுமுணுத்தன. பிராத்தனையாக இருந்திருக்கலாம். சங்கடப்படாமல், தயங்காமல் கோப்பையில் இருந்த நஞ்சு முழுவதையும் குடித்துவிட்டார். அதைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் துக்கம் தாங்காமல் கதறி அழுதனர். சிலர் ஓவென பெருஞ் சத்தத்துடன் கதறவே சாக்ரடீஸ் அவர்களை பொறுமையாக இருக்கும்படி அடக்கினார். சிறை அலுவலர் சாக்ரடீஸை பார்த்து சிறைக்குள் நடக்கும்படி கேட்டுக் கொண்டார். அவர் கட்டளைக்கு மறுப்பு தெரிவிக்காமல் சாக்ரடீஸ் எழுந்து நடக்க ஆரம்பித்தார். (ரத்த ஓட்டத்தில் சீக்கிமாக நஞ்சு கலக்க வேண்டும் என்பதற்காக) கால்கள் குளிர ஆரம்பித்தன... நடையில் தள்ளாட்டம்... சாக்ரடீஸால் முடியவில்லை... சாக்ரடீஸ் படுத்துக் கொண்டார்... அருகில் இருந்த வெளிளைப் போர்வையை எடுத்து போர்த்திக் கொண்டார். முகம் கூட வெளில் தெரியவில்லை. சிறிது நேரம் ஒரே அமைதி. திடீரென சாக்ரடீஸ் முகத்தில் இருந்த வெள்ளைத் துணியை விலக்கினார். "கிரிட்டோ, அங்களெபியஸீக்கு நான் ஒரு சேவல் கொடுக்க வேண்டும். கடனை அடைக்க மறந்துவிடாதே"இதுதான் சாக்ரடீஸ் பேசிய கடைசி வார்த்தை. மீண்டும் வெள்ளை போர்வையால் முகத்தை மூடிக்கொண்டார். உடம்பில் சில துடிப்பு தெரிந்தது. சில மணிநேரத்திற்கு பின் நண்பர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டது. சாக்ரடீஸின் நண்பர் கிரீட்டோ போர்வையை நீக்கி பார்த்த போது கண்கள் திறந்தபடியும், வாய் திறந்தபடியும் சாக்ரடீஸின் உயிர் பிரிந்திருந்தது. சாக்ரடீஸின் இமையையும் வாயையும் மெல்ல மூடினார் கிரீட்டோ.

எங்கெல்ஸீன் இரங்கல் உரையின் சுருக்கம்


மனிதன் எப்படி படிப்படியாக வளர்ச்சியடைந்தான் என்பதை டார்வின் கண்டுபிடித்தான். மானிட ஜாதியின் சரித்திரம் எப்படி படிப்படியாக வளர்ச்சியடைந்தது என்பதை மார்க்ஸ் கண்டு பிடித்தான். மனிதர்கள், அரசியல், விஞ்ஞானம், கலை, மதம் முதலியவைகளில் கவனஞ் செலுத்துவதற்கு முன் உண்ண வேண்டும்; குடிக்க வேண்டும்; நிழலில் இருக்க வேண்டும்; உடுக்க வேண்டும். எனவே அன்றாடத் தேவைகளுக்கான பொருள்களை உற்பத்தி செய்துக் கொள்வது அவசியம். அதற்கு ஏற்றார் போல்தான் அக்காலத்தினுடைய பொருளாதார அமைப்பு இருக்கும். அப்பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டே காலத்தினுடைய ராஜ்ய ஸ்தாபனங்கள், சட்டக் கொள்கைகள், கலைகள், மதக் கோட்பாடுகள் முதலியன அமைகின்றன. இந்த அடிப்படையைக் கொண்டே ராஜ்ய ஸ்தாபனங்கள் முதலியவற்றிற்கு வியாக்கியானம் செய்ய வேண்டும். இந்த சரித்திர உண்மையோ மார்க்ஸ் காலத்திற்கு முன் லட்சிய உலகத்தில் மறைந்து கொண்டிருந்தது. இந்த உண்மையை அறிஞர்கள் விபரீதமாக வியாக்கியானம் செய்து கொண்டு வந்தார்கள். இன்றைய முதலாளித்துவத்தின் கீழ் உற்பத்தி முறை எப்படி வளர்ச்சியடைந்திருக்கிறது. இதிலிருந்து எப்படி பணக்காரக் கூட்டத்தினர் உற்பத்தியாயினர் என்பதையும் மார்க்ஸ் கண்டுபிடித்திருக்கிறான். பொருளுற்பத்தி முறையில் மிஞ்சிய மதிப்பு என்னும் புதிய அம்சத்தைக் கண்டுப் பிடித்த பிறகு பொருளாதார சாஸ்திரிகள் எந்த இருளில் சென்றுக் கொண்டிருந்தார்களோ அதில் இருள் நீங்கி வெளிச்சம் ஏற்படத் தொடங்கியது. இப்படியான ஆராச்சிகளைச் செய்தாலே வாழ்க்கை பூர்த்தியடைந்து விடும். ஆனால் மார்க்ஸ் பல துறைகளில் ஆராய்ச்சி செய்திருக்கிறான். இவையெல்லாம் மேலோட்டமான ஆராய்ச்சிகள் இல்லை. கணித சாஸ்திரம் உட்பட பல புதிய உண்மைகளைக் கண்டுப்பிடித்து வெளியிட்டிருக்கிறான் மார்க்ஸ். மார்க்ஸீக்கு விஞ்ஞான சாஸ்திரமென்பது சிருஷ்டித்தன்மை வாய்ந்த சரித்திர ரீதியான ஒரு புரட்சி சக்தி. தத்துவ அளவில் மார்க்ஸ் எந்த உண்மையை கண்டுபிடித்தாலும் மகிழ்ச்சி அடைந்தான். அதையும் விட தொழில் வளர்ச்சி, சரித்திர வளர்ச்சிகளில் புரட்சிகரமான மாற்றங்களை கொண்டு வந்த போதோ மிகுந்த மகிழ்ச்சியடைந்தவன் மார்க்ஸ். முதலாளித்துவத்தின் கீழ் ஏற்பட்டிருக்கும் சமூதாய அமைப்பு அதனால் உண்டாக்கப்பட்ட ராஜ்ய ஸ்தாபனங்கள் ஆகியவற்றை வீழ்ச்சியடைய வைக்க எந்த வகையிலாவது, யாருடனாவது ஒத்துழைக்கவும் இன்றைய தொழிலாளர் உலகத்திற்கு விடுதலை தேடிக் கொடுக்க வேண்டுமென்பதில் எந்த வகையிலாவது ஒத்துழைக்க வேண்டும் என்பதும் மார்க்ஸீன் நோக்கமாக இருந்தது. சமூதாயத்தில் தொழிலாளர்களுக்கும் ஓர் அந்தஸ்து உண்டென்பதையும் அவர்கள் விடுதலை பெறுவதற்கு அவர்களுடைய நிலைமையை அவர்களே உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதிலும் முதன்மையாக உலகுக்கு எடுத்துக் காட்டியவன் மார்க்ஸ்.போராடுவது மார்க்ஸீன் சுபாவத்திலேயே அமைந்திருந்தது. உற்சாகத்தோடும், உறுதியோடும் போராடுபவன் மார்க்ஸ். மார்க்ஸீக்கு அதில் வெற்றியும் கிடைத்தது. மார்க்ஸ் பத்திரிக்கைகளுக்குப் பல கட்டுரைகள் எழுதி இருக்கிறான். தர்க்க ரீதியில் பல வியாசங்கள் எழுதியிருக்கிறான். பாரிஸ், ப்ரெஸ்ஸெல்ஸ், லண்டன் முதலிய இடங்களில் சங்கங்கள் உருவாக்கி இருக்கிறான். எல்லாவற்றிற்கும் மேலாக சிகரம் வைத்தார் போல் "சர்வதேச தொழிலாளர் சங்கத்தை" உருவாக்கி இருக்கிறான். இதைக் கொண்டு மார்க்ஸ் பெருமையடைவதற்கு நியாயம் உண்டு.ஆனால் மார்க்ஸ்...அதிகமாகத் துவேஷிக்கப்பட்டான்; அதிகமாக அவமதிக்கப்பட்டான்; சுயேச்சாதிகார அரசாங்கங்களும், குடியரசு அரசாங்கங்களும் நாட்டை விட்டு வெளியேற்றின. முதலாளிகளில் மிதவாதிகளும், தீவிரவாதிகளும் மார்க்ஸை கேவலமாக தூற்றினர். ஆனால் மார்க்ஸோ ஒட்டடைகளை ஒதுக்கித் தள்ளுவது போல் அலட்சியமாக ஒதுக்கித் தள்ளினான் மார்க்ஸ். அவசியம் ஏற்பட்டால் மட்டுமே எதிர்விணை ஆற்றுவான் மார்க்ஸ். இன்று ஐரோப்பாவின் கிழக்குக் கோடியில் இருக்கும் ஸைபீரியச் சுரங்கங்களிலும், அமெரிக்காவின் மேற்குக் கோடியில் இருக்கும் கலிபோர்னியாவின் கடற்கரையோரத்திலும் வேலை செய்துக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் அன்பையும், மதிப்பையும் பெற்றுக் கொண்டு அவர்களை துக்கத்தில் ஆழ்த்தி விட்டு இறந்து போய்விட்டான் மார்க்ஸ். "மார்க்ஸீக்கு அநேக எதிரிகள் இருந்திருக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால், மனிதனுக்கு மனிதன் என்ற முறையில் மார்க்ஸீக்கு ஒரு விரோதி கூடக் கிடையாது" என்று நான் திட்டவட்டமாக சொல்வேன். மார்க்ஸ் இறந்தாலும் மார்க்ஸீனுடைய சித்தாந்தங்கள் இன்னும் அநேக நூற்றாண்டுகள் உயிரோடு இருக்கும்.

புதன், 7 ஜனவரி, 2009

முந்தாசர் அல் ஜைதி - ஏகாதிபத்தியத்துக்கு கிடைத்த செருப்படி

ஒரு மனித மிருகத்தை செருப்பால் அடித்த முந்தாசர் அல் ஜைதி க்கு ஏழு ஆண்டுகள் தண்டனை என்றால் இராக்கில் பன்னிரண்டு லட்சம் மக்களை கொன்றவனும் நாட்டை சுடுகாடாக ஆகியவனுமான மனித மிருகம் ஜார்ஜ் புஷ் க்கு என்ன தண்டனை வழங்க போகிறது ?

சுதந்திரப் போராட்டம் அல்ல; ஆரியர், திராவிடர் போராட்டமே!

இந்தியாவை விட்டு பிரிட்டிஷ் ஆட்சி அடியோடு விலகப்போகிறதா, இல்லையா என்பது நமக்குத் தெரியாது. சீக்கிரத்தில் நாடு கழுதை புரண்ட களம் என்பது போல் சீரழியப் போகிறது என்பது தான் காணக்கூடியதாக இருக்கிறது. தூது கோஷ்டி தோல்வி அடையப் போகிறது; அடைந்து விட்டது என்கிறார்கள். பத்திரிகை செய்திக்காரர்கள். காங்கிரசார் பதவி ஏற்ற இந்தக் காலத்துக்குள்ளாகவே மக்களுக்கிடையே ஒரு சமரச முடிவு இல்லையானால், நாடு சீரழியப் போவது நிச்சயம். இதனால் பிரிட்டிஷ்காரர்களுக்கு நஷ்டமில்லை. அவர்கள் ஆதிக்கம் இன்னும் பல நாளைக்குப் பலப்படத்தான் இடமாகும். ஆரியர்களுக்கும் கஷ்டமில்லை. ஆரியர் பிரிட்டிஷாருடன் இன்னும் பலமான ஒப்பந்தம் செய்து கொள்ளுவர். காந்தியாருக்கும் குறைவு வராது. அவர் அவதாரக் கடவுள் தன்மை மாறி உண்மைக் கடவுளாகி விடுவார். தொல்லைப்படப் போவது நாம்தான் : முஸ்லிம், திராவிடர், ஷெட்யூல்டு வகுப்பார் ஆகியவர்களும் இக்கூட்டத்தில் உள்ள ஏழை, எளியவர், தொழிலாளர் கூலியாட்கள் ஆகிய பாட்டாளி மக்களும்தான். அதோடு மாத்திரமல்ல, கண்டிப்பாக இந்து -முஸ்லிம் ரத்தம் சிந்துதலும், மேல் ஜாதி, கீழ் ஜாதி ரத்தம் சிந்துதலும், சோம்பேறி பாட்டாளி ரத்தம் சிந்துதலும், முதலாளி, தொழிலாளி ரத்தம் சிந்துதலும் நடந்துதான் தீரும். இந்த முப்பது வருஷ காலமாக நம் மக்கள், நான் முதல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்பட பொது நலனுக்கு என்று பாடுபட்ட, கஷ்ட நஷ்டமனுபவித்த தியாகம் என்பதற்கு இதுதானா பலன் என்று பாருங்கள்.இந்த சந்தர்ப்பத்தில் பார்ப்பனப் பத்திரிகையில் செய்து வரும் அட்டூழியம் கொஞ்ச நஞ்சமல்ல. அவை இந்து முஸ்லிம் கலகத்தையும், கீழ் ஜாதி மேல் ஜாதி கலகத்தையும், திராவிடர்களுக்குள் ஒருவருக்கொருவர் குத்து, வெட்டு, அடி, உதை, கொளுத்து ஆகிய போராட்டங்களையும் வளர்த்து விடுகின்றன.இன்றைய அரசியல் போராட்டம் என்பது என்ன? இந்தியன் வெள்ளையன் போராட்டமா? இல்லையே. இன்றைய இந்தியப் பிரச்சினை, சுயராஜ்யப் பிரச்சினை அல்லவே; சுதந்திரப் பிரச்சினை அல்லவே, ஆங்கிலேயேஅந்நியன் பிரச்சினை அல்லவே. இந்து, முஸ்லிம் பிரச்சினையாகத்தானே காணப்படுகின்றன.இந்து முஸ்லிம் ஆதிக்கத்தில் இருந்து விடுபடுவதும், இந்து மதம் காப்பாற்றப்படுவதும், இஸ்லாம் காப்பாற்றப்படுவதுதானே இன்று சுதந்திரப் போராக ஆகிவிட்டது. இதே நிலையில்தானே ஆரியம், திராவிடம் என்கின்ற பிரச்சினையும் இருக்கிறது. திராவிடன் ஆரிய ஆதிக்கத்தில் இருந்து மீண்டு தனித்தன்மை பெறுவதை சுயராஜ்யம் என்கிறான். ஆரியன் திராவிடரை அடக்கி அழுத்தி வைப்பதை, மனு ஆட்சி புரிவதை சுயராஜ்யம், தர்மராஜ்யம், ராமராஜ்யம் என்கின்றான். தோழர்களே! தூது கோஷ்டி வெற்றி பெற்றாலும் நாம் சூத்திரர், பறையர், 4-ஆவது 5-ஆவது ஜாதியாகத்தான் இருப்போம். தூது கோஷ்டி தோல்வியுற்றாலும் நாம் 4- ஆவது 5- ஆவது ஜாதிதான். காங்கிரசுக்கும் நமக்கும் என்ன பேதம்? காங்கிரஸ் அந்நியன் ஆதிக்கத்தில் இருந்து விலக வேண்டும் என்கின்றது.நாமும், ஆம் அது சரி அதுதான் முதல் வேலை என்கிறோம். ஆனால் அந்நியர் என்கின்ற பட்டியில் திராவிடனல்லாதவன் எவனும் அந்நியன்என்று விளக்கம் எழுதிக்கொள் என்கின்றோம். ஒப்புக் கொள்ளுகிறதா காங்கிரஸ்? ஆங்கிலேயன் தவிர மற்றபடி இந்தியன் என்ற பெயரால் எவன் பிழைத்தாலும், எவன் திராவிட நாட்டைக் கொள்ளை கொண்டாலும் சரி என்கிறது காங்கிரஸ். நாம் திராவிட நாட்டை திராவிடத்தில் நிரந்தரமாய் வாழும் திராவிடநாட்டுக் குடிகள் தவிர, பிர்லா, பஜாஜ், காந்தி, நேரு, பட்டேல், பட்டானி, குஜராத்தி, மார்வாரி, பனியா, சிந்தி, காஷ்மீரி, பட்டான், மேமன் எல்லைப்புறக்காரன் எவரும் சுரண்டக்கூடாது என்கின்றோம்.இந்தியன் மட்ட ஜாதியல்ல; வெள்ளையன் உயர்ந்த ஜாதி அல்ல. இருவருக்கும் மாத்திரமல்ல. மூவருக்கும் அதாவது திராவிடன், ஆரியன், வெள்ளையன் ஆகிய மூவருக்கும் சம உரிமை வேண்டும். திராவிடன் சூத்திரனல்ல; பறையன் அல்ல; தீண்டப்படாதவன் அல்ல; ஆரியன் பிராமணன் அல்ல, மேல் ஜாதி அல்ல; பூதேவன் அல்ல. சம உரிமையில் சம விகிதாசாரத்தில் சம போக போக்கியத்தில், சம உழைப்பில் இருக்க வேண்டிய மக்கள் என்கின்றது திராவிடர் கழகம்.இந்தியா முழுமைக்கும் ஒரு சுயராஜ்யம் போதும் என்கிறது காங்கிரஸ். பிரிக்கப்பட்ட ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனி சுயராஜ்யம் வேண்டும். ஜின்னா பிரிவினை கேட்டால் -அவர் தேசத்துரோகி, முட்டுக் கட்டைவாதி. அம்பேத்கர் மனிதத்தன்மை, சம உரிமை கேட்டால் - அவர் தேசத்துரோகி, முட்டுக் கட்டைவாதி; கம்யூனிஸ்டுகாரர்கள் கேட்டால் அவர்கள் ஒழிக்கப்பட வேண்டிய இழிமக்கள்; திராவிடர்கள் பாதுகாப்பு சமுதாய உரிமை கேட்டால் -அவர்கள் தேசத்துரோகி! தோழர்களே! கலகத்தில் காலித்தனத்தில் ஆரியன் எவனாவது சிக்கிக் கொள்கிறானா? திராவிடன் கையில் சாணி உருண்டையும் கல்லையும் கொடுத்து திராவிடன் மீதே எறியச் சொல்லிவிட்டு, மறைவில் இருந்து வேடிக்கை பார்க்கிறானே! இதுவா விடுதலை முயற்சி?

(பள்ளிகொண்டாவில் நடைபெற்ற கூட்டத்தில் தந்தை பெரியார் ஆற்றிய உரை - 'விடுதலை' 15.06.1946)