புதன், 25 ஜூலை, 2012

இந்தியாவில் சிதம்பரம் தலைமையில் தொடரும் படுகொலைகள்



Friday, July 06, 2012



கடந்த ஜூன் 28 ம் நாள் இரவு சத்திஸ்கார் மாநிலத்தில் உள்ள பீஜப்பூர் மாவட்டத்தில் சுமார் இருபது மாவோயிஸ்டுகளை ஒரு நீண்ட துப்பாக்கிச் சண்டைக்குப் பின் சுட்டு வீழ்த்தியதாக மத்திய ரிசர்வ் போலீஸ் படையும் சத்திஸ்கார் போலிசும் அறிவித்தன. இந்தியத் தொலைக் காட்சிகள் அதிலும் குறிப்பாக ஆங்கிலச் செய்தி நிறுவனங்கள் இந்த வெற்றியை நாள் முழுவதும் மீண்டும் மீண்டும் அறிவித்த வண்ணம் இருந்தன. மாவோயிஸ்டுகளுடனான போரில் இது ஒரு மிகப் பெரும் வெற்றியாக நாடு முழுவதும் பறை சாட்டப்பட்டது. தொலைகாட்சிகளில் போலீஸ் அதிகாரிகள், ஒய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் மீண்டும் மீண்டும் தோன்றி இது ஓர் மிகப் பெரும் வெற்றி என்ற கொண்டாடிக் கொண்டிருந்தனர்.

கூடவே, அமைச்சர் சிதம்பரம் தொலைக் காட்சியில் தோன்றி தமது தலைமையில் இயங்கும் படைகள் இந்த அரும் சாதனையை நிறைவேற்றியதாக மகிழ்ச்சி பொங்க அறிவித்தார். ஒரு தேர்ந்த பொய்யனுக்குரிய பம்மாத்துடன் சம்பவம் குறித்துப் பசப்பினார். இந்த நடவடிக்கை மிகவும் திட்டமிட்டு, பல நாட்களாக சேகரிக்கப்பட்ட உளவுச் செய்திகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பப்டதாக அறிவித்தார். இந்தப் போரில் ஒரு போலீஸ்காரர்கூட சாகவில்லை என்றும் ஆறு பேருக்குக் காயம் மட்டுமே ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.  இது மாவோயிஸ்டுகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், இனி வரும் காலங்களில் போலீஸ் படைகள் தீவிரமாகப் போராடும் என்றும் மகிழ்ச்சியுடன் அறிவித்தார்.

ஆனால், அவரது பெருமை அடுத்த சில மணி நேரத்தில் அம்பலமாகி விட்டது.கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் என்ற பழமொழி பொய்யாகி சிதம்பரத்தின் பொய் எட்டு மணிநேரம் தான் என்று உணர்த்தியது. உண்மை கசியத் தொடங்கி குற்றக் கும்பலான மன்மோகன், சிதம்பரம், விஜயகுமார்  ஆகியோரின் கோரமுகங்களை வெளிக் கொண்டு வந்துள்ளது.


நடந்தது என்ன?  
பழங்குடியினரது  வாழ்வில் ஆட்டமும் பாட்டமும் கூடிய திருநாட்கள் பல. அவற்றில் ஒன்று விதைப்புத் திருநாள். மழைக்காலம் தொடங்கும் ஜூன் - ஜூலை மாதத்தில் ஊர்கூடித் திட்டமிட்டு செய்யும் பயிர் பற்றியும், பாசன விபரம் பற்றியும் விவாதிக்க அவர்கள் ஆண்டு தோறும் கூடுவது வழக்கம். மனிதர்களின் கூட்டு உழைப்பையும் இயற்கையின் தயவையும் மட்டுமே நடைபெறும் பழங்குடி விவசாயத்தில் இந்த நாள் மிகவும் முக்கியமானது. குறிப்பிட்ட இந்த நாளில் அனைவரும் கூடித் திட்டமிடுவது பழங்குடி விவசாயிகளின் நடைமுறை. இந்த நாளில், வரிசைக்கிரமமாக யார் விதைப்பது, என்ன விதைப்பது என்று ஊர் கூடி முடிவு செய்வார்கள். மழை கடந்து போகும் முன் மிஞ்சியிருக்கும் மிகக் குறுகிய காலத்தில் விவசாயப் பணிகளை முடிக்க வேண்டுமானால் ஒவ்வொரு குடும்பமும் அடுத்த குடும்பத்தை, அடுத்த ஊர்க்கார்களை நம்பி ஒருவருக்கு ஒருவர் கொடுத்து வாங்கி ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அப்படித்தான், பீஜப்பூர் மாவட்டத்தில் உள்ள சிறுகூடம், கொத்தகூடம், ராஜூபெண்டா என்ற மூன்று கிராமங்களைச் சேர்ந்த மக்கள் சுமார் எண்ணூறு பேர் அன்று கூடினர். ஆட்டமும், பாட்டும், இசையும், இரவு முழுக்க நடந்து கொண்டிருந்தது.

சிதம்பரம் மந்திரியாக இருக்கும் உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் வரும் பாம்புப் படை (COBRA forces) என்ற பெயரில் அழைக்கப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படைகள் சுமார் முன்னூறு பேர் அடங்கிய போலீஸ் படைகள் இந்தக் கூட்டத்தைச் சுற்றி வளைத்தது. கண்மண் தெரியாமல் சுடத் தொடங்கின. இந்தப் படைகள் பழங்குடிகளைக் கொலைகள் செய்வதில்  பேரின்பம் கொள்ளும் போலீஸ் அதிகாரியான விஜயகுமார் தலைமையில் இயங்குகின்றன. இரவில் இறந்தது பெரும்பாலும் குழாந்தைகள். இரவு விடிந்து மறுநாள் சிக்கிய இளைஞர்களை பிடித்துக் கொன்றனர். போலிஸ் சுட்டுக் கொன்ற இருபது பேர்களும் அப்பாவிப் பழங்குடிகள் அவர்களில் ஒருவரும் மாவோயிஸ்டுகள் இல்லை.


கொலை செய்யப்பட்டவர்களில் பத்துப்பேருக்கும் மேலானவர்கள் குழந்தைகள். இவர்களில், பள்ளி செல்லும் மாணவர்கள் விடலைப் பையன்கள், இளஞ் சிறுமிகள் அடக்கம். அத்துடன் வயதான முதியவர்கள், ஓடமுடியாத கிழவிகள் அடக்கம். பின் வரிசையிலும் முன் வரிசையிலும் அமர்ந்திருந்தவர்கள் முதலில் கொல்லப்பட்டவர்கள். இதில் தபேலா வாசித்துக் கொண்டிருந்த இசைக்கலைஞர் தபேலாவைத்த தழுவியபடியே  கொல்லப்பட்டார். இருளில் தப்பியோடும் போது போலீசின் கண்ணில் தட்டுப் பட்ட சிறுவர்களை கோழியை அமுக்குவது போல அமுக்கி அவர்களை முதலில் காலில் சுட்டும் பின்னர் தொண்டையில் சுட்டும் கொலை செய்தனர். மறு நாள் காலையில்தான் நிகழ்வின் முழுக் கோரமும் தெரியத் தொடங்கியது. மனதைத் திடப்படுத்திக்கொண்டு பிணங்களைச் சேகரிக்க வந்த முதியவர்கள், பெண்களை அடித்தும், மானபங்கப் படுத்தியும், சிலரது முலைகளை அறுத்தும் சிலரை போலீஸ் கொலை செய்தது.


எந்த ஆயுதமும் இன்றி திருவிழாவில் கூடியிருந்த அப்பாவிகளை கொலை செய்ததைத்தான் இப்படி வீரம் மிக்க போராக சிதம்பரம் சித்தரித்தார். இந்திய தொலைக் காட்சிகள் தங்கள் படைகளின் இத்தகைய தீரத்தைத்தான் நாள் முழுதும் கொண்டாடின. அடுத்த இரண்டு நாட்களில் உண்மை சிறுகச்சிறுக கசியத் தொடங்கியதைக கண்ட சிதம்பரம் இறுக்கமான முகத்துடன் தொலைக்காட்சியில் தோன்றி தமது படைகள் முதலில் துப்பாக்கிகளால் சுடப் பட்டதால் திருப்பித் தாக்கினர் என்றார். இப்படிப்பட்ட நேரங்களில் தொடர்பில்லாதவர்கள் யாராவது அடிபட்டிருந்தால் அது கொல்லப்பட்டவர்கள் தான் பொறுப்பு என்றார். இரவில் அவர்கள் ஏன் கூட வேண்டும். மாவோயிஸ்டுகள் அப்பாவி மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியிருக்கலாம் என்று ஒரு புளுகையும் அவரது எடுபிடிகள் அவிழ்த்து விட்டார்கள். 

கொலைகாரன் விஜயகுமார்
இந்தக் கொலைகளைத் தான் தமது படைகள் ஏதோ பெரும் போர் ஒன்று நடத்தி இருபது தீவிரவாதிகளைச் சுட்டுக் கொன்றதாக போலீஸ் துறை தலைவர் விஜயகுமார் பெருமைப்பட்டார். இந்த நபர் நடத்திய கொலைகள் தமிழ் நாட்டில் அனைவருக்கும் தெரிந்ததே. வீரமணி, வெங்கடேச பண்ணையார் போன்ற உள்ளூர் ரவுடிகளை போலிமோதலில் சுட்டுக் கொன்று ஜெயலலிதா முன்பு தன்னை ஒரு வீரப் பிரதாபியாக அனைவருக்கும் காட்டிக் கொண்டவர். ஆனால், இவரது கொலைகள் கடந்த எண்பதாம் ஆண்டுகளிலேயே கோமாளி எம்.ஜி.ஆரின் ஆட்சியின் போது தொடங்கியது. தர்மபுரியில் பல புரட்சியாளர்களையும், புரட்சிகர இயக்கங்களின் ஆதரவாளர்களையும்  பிடித்துச் சென்று சுட்டுக் கொன்றதில் இவரது பெருமைகள் தொடங்கின. இன்னொரு கொலைகாரனான தேவாரம் இவருக்கு நேரடிக் குருநாதர்.

இந்த இருவரும் பின்னாளில், வீரப்பனைப் பிடிக்கிறோம் என்று ஆயிரக் கணக்கான பழங்குடிகளைத் துன்புறுத்தியதிலும்  நூற்றுக்கும் மேலானவர்களை கொன்றதும் அனைவருக்கும் தெரிந்த செய்திதான். இறுதியில், விசம் கொடுத்துக் கொல்லப்பட்ட வீரப்பனை நான் தான் பிடித்தேன் என்று மார் தட்டியவர் இவர். அப்பாவிகளைக் கொலை செய்யும் தமது பெருமையை மூலதனமாக்கி மிக முக்கியமான இந்திய ரிசர்வ் போலீஸ் படைக்கு தலைவராக சிதம்பரத்தின் தயவில் வந்து சேர்ந்தார்.
பொய் சொல்வதில் இவர் சிதம்பரத்தையும் விஞ்சியவர். பல பெண்களது முலைகள் வெட்டிச் சிதைக்கப்பட்டுள்ளதைத் தாம் கண்டதாகவும், போலீசார் அப்பாவிகளைக் கொன்றிருப்பதாகவும் பிணங்களைக் கண்ட பத்திரிகையாளர்கள் சொல்கிறார்களே இதற்கு உங்கள் பதில் என்ன? என்று இவரிடம் கேட்டனர். அதற்கு விஜயகுமார் சொன்னார், “எங்கள் படைகள் அப்பாவிகளை சித்திரவதை செய்வது என்பது நினைத்துப் பார்க்க முடியாதது, அப்படிப்பட்ட எண்ணம் அவர்களின் ரத்தத்தில் கூடக் கிடையாது” என்று புளுகினார்.


இந்தப் பேர்வழி செய்த சித்திரவதைகளை சதாசிவம் கமிசன் உட்பட பல விசாரணைகள் மூலம் வெளி வந்துள்ளது. நீதிமன்றம் விஜயகுமார் செய்த சித்திரவதைகளுக்கு நட்ட ஈடு வழங்க உத்தரவிட்டுள்ளது. பல புகார்கள் பதிவு செய்யப்படாத வழக்குகள் இன்னமும் இந்த நபர் மீது நிலுவையில் உள்ளன. இவரின் கூட்டாளியான சங்கர் பிதரி என்ற கர்நாடக் போலீஸ் அதிகாரியை உயர் நீதிமன்றம் இதே குற்றச் சாட்டுகளின் அடிப்படையில் “கொலைகார்கள் போலீஸ் துறைத் தலைவராக பணியாற்ற தகுதியில்லாதவர்கள் என்று தீர்ப்பளித்துப் பணி நீக்கம் செய்தது. ஆனாலும் சிதம்பரம் மன்மோகன் சிங்கின் தயவு இருப்பதால் இந்த கொலைகாரன் சிறு பிள்ளைகளைக் கொல்வதை அபாரமான துணிச்சலாகக் காட்டிக் கொள்கிறார். எந்த ஒரு இந்தியப் பத்திரிகையும் தொலைக் காட்சியும் இந்தக் கொலைகாரனை எதிர்க் கேள்வியும் கேட்கவில்லை.

கொலைகள் அம்பலமான பிறகு நாளுக்கு ஒரு பொய் என்ற அளவில் அவிழ்த்து விட்டார். “மாவோயிஸ்டுகள் குழந்தைகள் பெண்களை முன்னிறுத்தி கேடயமாகப் பாவித்திருக்கலாம் என்றும் தாம் இப்படிப்பட்ட சம்பவங்களை ரகசியம் கருதி இதுவரை வெளியிடவில்லை என்றும், இப்போது நேரம் வந்ததால்  வெளியில் சொல்கிறேன்” என்றார்.
சிதம்பரத்தின் பொய்யை அவர் ஒட்டிக கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர்களே நேரடியாக கேள்வி கேட்கத் தொடங்கி விட்டனர். சத்திஸ்கர் மாநில காங்கிரஸ் கட்சி சிதம்பரம் சொன்னதில் சிறிதும் உன்மைமையில்லை என்று அறிக்கை வெளியிட்டது. கூடவே, கொலை செய்யப் பட்டவர்களுக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் எந்த தொடர்புமில்லை என்றும் சொன்னது.

போலீசார் துப்பாக்கியால் சுடப்பட்டது உண்மையா?
மாவோயிஸ்டுகள் வைத்திருக்கும் குருவி சுடும் துப்பாக்கிகள் மூலம் போலீசார் சுடப்பட்டனர் என்றும் அதன் பின்னரே இந்தத் தாக்குதல் தொடங்கியது என்றும் ஒரு கதையை அவிழ்த்து விட்டனர். கூடவே, சில குருவி சுடும் துப்பாக்கிகளையும் கொண்டு வந்து மாவட்டப் போலீசார் காட்டத் தொடங்கினர். ஆறு போலீசார் சுடப்பட்டு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக சிதம்பரம் சொன்னார்.
சுடப்பட்ட போலீசாரை நேரில் காணச் சென்ற இந்து பத்திரிக்கை நிருபரிடம் மருத்துவமனை தலைமை டாக்டர் சொன்னது: “மொத்தத்தில் இரண்டு பேருக்கு சிறிய துப்பாக்கி தோட்டாச் சில்லுகளால் காயம் ஏற்பட்டுள்ளது. மற்ற இருவர் தடுமாறி விழுந்து கால் சுழுக்கியதினால் நடக்க முடியாமல் இங்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் என்றார்”. துப்பாக்கிகளை கண்மண் தெரியாமால் சுட்டதில் பாறைகளில் பட்டுச் சிதறிய தோட்டாச் சில்லுகள் இந்தக் காயத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்று ஒரு மருத்துவர் சொன்னதாக இந்து பத்திரிகையின் நிருபர் எழுதியிருக்கிறார்.
கடைசியில் மாவோயிஸ்டுகள் சுட்டதாகச் சொன்னதும் பொய் என்று அம்பலமானது.

ஏன் இந்தக் கொலைகள்?
சிதம்பரம் ஏன் இந்தக் கொலைகளுக்கு தலைமை தாங்கி நடத்துகிறார் என்பது நாம் அறிந்து கொள்ள வேண்டும். இந்தக் கிராமங்கள் அமைந்திருக்கும் நிலங்கள் அளப்பரிய தாதுக்களைக் கொண்டிருக்கின்றன. இரும்பு, செப்புத் தாதுக்கள் இதில் மிகவும் முக்கியமானது. மன்மோகன் சிங் தலைமயில் அறிவித்து நடத்தப்பட்டு வரும் புதிய பொருளாதார கொள்கை என்பது உலக வங்கியின் புதிய காலனியாதிக்க முறை. இந்த பொருளாதார கொள்கையின்படி பல உள்ளூர் வெளியூர் கம்பெனிகள் முளைத்து நிலங்களை அபகரிக்கக் காத்துக் கொண்டிருக்கின்றன.

இப்படி இதுவரை சத்தீஸ்கரில் மட்டும் சுமார் 650  கிராமங்கள் சிதம்பரத்தின் தலைமையில் காலி செய்யப் பட்டுள்ளன. ஐந்து ஆண்டுகளுக்கு முன் சுமார் 10  லட்சம் மக்கள் வாழ்ந்த இந்தப் பகுதியில் இன்று பாதிப் பேர் கூட கிராமாங்களில் இல்லை. எங்கே போனார்கள் என்பதற்குக் கூட அரசிடம் கணக்கு இல்லை. அவர்கள் உள்நாட்டில் அகதிகளாக ஆந்திர மாநிலத்தில் தஞ்சம் புகுந்திருப்பதாகவும் பலர் காடுகளுக்குள் சென்று உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வாழ்வதாகவும் சில அறிக்கைகள் சொல்கின்றன.
இப்படி கிராமங்களைக் காலி செய்து நிலைகளை கைப்பற்றுவது முதலில் சல்வா ஜூடும் என்ற கூலிப் படைகள் செய்து வந்தனர். இந்திய உச்ச நீதிமன்றம் இந்தக் கூலிப் படைகளை தடை செய்தவுடன் விஜயகுமாரின் மத்திய ரிசர்வ் படைகள் நேரடியாக களம் இறங்கியுள்ளன.

மக்களை வெளியேற்று நிலங்களைக் கைப்பற்று: புதிய பொருளாதாரம்
இப்படி கிராமங்களை ஒழித்து எஞ்சிஇருக்கும் மக்களை கூண்டுகள் போன்ற காலனிகளில் தள்ளுவது நூறு ஆண்டுகளுக்கு மேலாக செய்யப்பட்டு வரும் ஒரு நடைமுறைதான். இலங்கைப் போரிலும் இதே வழிமுறைதான் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த மூன்று கிராமங்களையும் சுரங்கம் தோண்டுவதற்காகவே சிதம்பரத்தின் கூலிப் படைகள் தாக்கியிருக்கின்றன. இனி வரும் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ரூர்கேலா போன்ற மிகப் பெரும் இரும்பு ஆலைகளுக்குத் தேவையான தாதுக்கள் இந்தக் கிராமங்களில் இருந்து தான் தோண்டவேண்டும். அதற்கென அமைக்கப்படும் தனி ரயில் பாதையில் இப்படி இன்னும் சுமார் ஐநூறு கிராமங்கள் உள்ளன. இவர்களது எதிர்ப்பை சமாளிக்க ஒரே அடியாக இந்தக் கிராமங்களை அழித்து விடுவது என்ற வழிமுறையை சிதம்பரம் வகுத்து செயல் படுத்தி வருகிறார். மக்களை ஒரேயடியாக கொலை செய்வது மிஞ்சியவர்களை ஓரிடத்தில் குவிப்பது, நிலங்களைக் கைப்பற்றுவது இது தான் புதிய பொருளாதாரக் கொள்கையின் வழி முறை.

கொலைகளை நிறுத்து !! கொலைகாரர்களை கைதி செய்!
அப்பட்டமான கொலை நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் உள்துறை அமைச்சர் சிதம்பரம், ரிசர்வ் போலீஸ் தலைவர் விஜயகுமார், மாநில முதல்வர் ராமன் சிங் அதை நியாயப் படுத்தும் பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை செயலர் வி.கே. சிங் ஆகியோரை இந்திய சட்டங்களின் படியும், சர்வதேசப் போர் நடத்தை சட்டங்களின் படியும் உடனடியாக கைது செய்து, சிறையில் அடைத்து விசாரணை செய்து,. தண்டனை வழங்க கோருவது.அணைத்து சனநாயக உரிமையாளர்களின் கடமையாகும்.
nandri: kalaiyagam

திங்கள், 2 ஜனவரி, 2012

ஞாயிறு, 1 ஜனவரி, 2012

" In which part of India is the Constitution prevailing....? In Dantewada, Bijapur, Kanker, Narayanpur, Rajnandgaon? In Jharkhand, Orissa? In Lalgarh, Jangalmahal? In... the Kashmir Valley? Manipur? Where was your Constitution hiding for 25 long years after thousand of Sikhs where massacred? When thousands of Muslims were decimated? When lakhs of peasants are compelled to commit suicides? When thousands of people are murdered by state-sponsored Salwa Judum gangs? When adivasi women are gangraped? When people are simply abducted by uniformed goons? Your Constitution is a piece of paper that does not even have the value of a toilet paper for the vast majority of the Indian people..." :comrade Azad

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011

அன்னா ஹசாரே பற்றி -அருந்ததி ராய்


தொலைக்காட்சிகளில் நாம் பார்ப்பதுதான் புரட்சி என்றால், அதுதான் சமீபத்தில் நடந்தவற்றிலேயே தர்மசங்கடமான, தெளிவற்ற புரட்சியாக இருக்க முடியும். ஜன் லோக்பால் மசோதா குறித்த எப்படிப்பட்ட கேள்விகள் உங்களுக்குள் இப்போது எழுந்தாலும், அதற்கான விடைகள், இப்படியாகத்தான் கிடைக்கும். பெட்டிக்கு நேராக டிக் செய்து கொள்ளுங்கள், அ) வந்தே மாதரம். ஆ) பாரத் மாதாகீ ஜெய். இ) அண்ணாதான் இந்தியா, இந்தியாதான் அண்ணா. ஈ) ஜெய் ஹிந்த்.

முழுக்க முழுக்க வெவ்வேறு காரணங்களுக்காக, வெவ்வேறு வழிமுறைகளில் போராடி வரும் மாவோயிஸ்ட்டுகளுக்கும், ஜன் லோக்பால் மசோதாவுக்கும் ஒரு விஷயம் பொதுவாக இருக்கிறது – அது, இந்திய அரசியல் அமைப்பை தூக்கி எறிவது. இதற்காக ஒருதரப்பினர் கீழிருந்து மேலாக, இழப்பதற்கு ஏதுமற்ற வறியவர்களிலும் வறியவர்களான ஆதிவாசி மக்களை இராணுவமயப்டுத்தி ஆயுதமேந்தி போராடுகிறார்கள். மறுதரப்பினர் மேலிருந்து கீழாக, ரத்தம் சிந்தாத காந்திய வழியில், புதிதாக வார்தெடுத்த புனிதரின் தலைமையில், நகர்புற – முக்கியமாக மேட்டுக்குடியினரில் பெரும்பாலானவர்களை உள்ளடக்கிய படையைக் கொண்டு போராடுகிறார்கள். (இந்த விஷயத்தில் அரசாங்கம்மும் தன்னை தூக்கியெறிவதற்கு இயன்ற அனைத்தையும் செய்து துணை நிற்கிறது)

ஏப்ரல் 2011ல் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை அண்ணா ஹசாரே முதல்முறையாக ஆரம்பித்த காலகட்டத்தில், அடுத்தடுத்து வெளியாகிவந்த மிகப்பெரிய ஊழல் செய்திகளால் தனது நம்பகத்தன்மை ஆட்டம் கண்டு வந்ததை உணர்ந்திருந்த இந்திய அரசாங்கம், மக்களின் அதிருப்தியை திசை திருப்ப, அண்ணாவின் குழுவை (டீம் அண்ணா) – இந்த ‘சிவில் சமூக’ குழுவால் தேர்வு செய்யப்பட்ட வணிகச் சின்னம் இது – ஊழலுக்கு எதிரான புதுச்சட்டத்தின் வரைவுக்குழுவில் இணைந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்தது. ஆனால், சில மாதங்களிலேயே இந்த கூட்டு வரைவுக் குழுவை கைவிட்டுவிட்டு, எவ்வகையிலும் பயனில்லாத, ஓட்டைகள் நிரம்பிய தனது சொந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது.

பிறகு, ஆகஸ்ட் 16ம் தேதி காலையில், அண்ணா ஹசாரே இரண்டாவது முறையாக தனது காலவறையற்ற உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னரே, சட்டத்துக்கு புறம்பான எந்த நடவடிக்கையிலும் அவர் ஈடுபடுவதற்கு முன்னரே, கைது செய்து சிறையில் அடைத்தது. இதனையடுத்து ஜன் லோக்பால் மசோதாவை அமல்படுத்துவதற்கான போராட்டம் என்பது, போராடுவதற்கான உரிமை தொடர்பான போராட்டமாகவும், ஜனநாயகத்துக்கான போராட்டமாகவும் உருமாறியது. இந்த ‘இரண்டாவது சுதந்திர போராட்டம்’ தொடங்கிய சில மணித்துளிகளில் அண்ணா விடுதலை செய்யப்பட்டார். ஆனால், தந்திரமாக சிறையை விட்டு செல்ல மறுத்த அவர், திகார் சிறைச்சாலையின் மரியாதைக்குரிய விருந்தினராக தங்கி, உண்ணாவிரதத்தை ஆரம்பித்து, பொது இடங்களில் உண்ணாவிரதம் இருப்பதற்கான கோரிக்கையை முன்வைத்தார். மூன்று நாட்களுக்கு மக்கள் கூட்டமும், தொலைக்காட்சிகளின் வாகனங்களும் சிறைக்கு வெளியே குழுமியிருக்க, அனைத்து தேசிய தொலைக்காட்சிகளிலும் ஒளிப்பரப்புவதற்காக ஹசாரேவின் வீடியோ செய்திகளை ஏந்தியபடி அண்ணாவின் குழுவினர் உயர் பாதுகாப்பு வசதி கொண்ட அச்சிறைக்கு உள்ளும் வெளியிலுமாக மின்னலென பறந்துக் கொண்டிருந்தனர். (வேறு யாருக்கேனும் இந்த பேரின்ப வாழ்வு கிடைக்குமா?)

இதற்கிடையில், தில்லி மாநகராட்சி ஆணையத்தை சேர்ந்த 250 தொழிலாளர்களும், 15 லாரிகளும் (டிரக்குகள்), 6 கனரக மண் சீராக்கும் வாகனங்களும் கடிகாரத்துக்கு ஓய்வு தராமல் வாரயிறுதியில் நடைபெறவிருக்கும் கண்கவர் காட்சிக்காக ராம்லீலா மைதானத்தை சீர்படுத்திக் கொண்டிருந்தன.

இப்போது உள்ளங்கையும், உள்ளங்காலும் பரபரக்க, பக்தி முற்றிய நிலையில் அண்ணாவின் பெயரை உச்சரிக்கும் கூட்டம் குழுமியிருக்க, வானுயர்ந்த கேமராக்கள் கண்சிமிட்டியபடி படம் பிடிக்க, இந்தியாவின் விலைமதிப்பில்லாத மருத்துவர்கள் பராமரிக்க, மூன்றாவது முறையாக அண்ணா ஹசாரேவின் காலவறையற்ற உண்ணாவிரதம் தொடங்கியது. ‘காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, இந்தியா ஒன்றே’ தொலைக்காட்சி தொகுப்பாளர்கள் நமக்கு சொல்கிறார்கள்.

அண்ணா ஹசாரேவின் போராட்ட வழிமுறைகள் காந்திய வழியாக இருக்கலாம், ஆனால், அவரது கோரிக்கைகள் நிச்சயம் அப்படியானதல்ல. அதிகாரத்தை ஒன்றுகுவிக்காமல் பகிர்ந்தளிக்கச் சொல்லும் காந்தியின் கருத்துகளுக்கு முரணாக ஜன் லோக்பால் மசோதா அரக்கத்தனமான, எதேச்சதிகார, ஒருமுகப்படுத்தப்பட்ட அதிகார மையத்தை கோரும் ஊழல் தடுப்பு மசோதாவாக இருக்கிறது. இதில், கவனத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் பூதாகரமான ஜனநாயகத்தை நிர்வகிக்க, ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணிபுரிய, காவல்துறையின் அதிகாரத்துடன் பிரதமர் முதல் நீதிபதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அனைத்துத் துறை அதிகாரிகள், அரசாங்கத்தின் கடைநிலை ஊழியர்கள் வரை அனைவரை குறித்தும் துப்பு துலக்கி விசாரிக்கவும், கண்காணிக்கவும், தண்டிக்கவும் அதிகாரம் உள்ளது. இதற்கென்று சொந்தமாக சிறைச்சாலைகள்தான் இருக்காது. மற்றபடி சுதந்திர நிர்வாக அமைப்பாக இயங்கி ஏற்கனவே வரைமுறையில்லாமல் ஊதிப் பெருகி, மக்களுக்கு பதில் சொல்லும் கடமையற்று இருக்கும் இப்போதைய ஊழல் அமைப்பை எதிர் கொள்ளும் இன்னொரு நிர்வாக அமைப்பாக செயல்படும். அதாவது கட்டுப்படுத்த முடியாத ஒரு விலங்காக இதுநாள்வரை இருந்த ஜனநாயகமற்ற அமைப்பு, இனி இரண்டாக பெருகியிருக்கும்.

இந்த ஜன் லோக்பால் மசோதா மூலம் ஊழல் ஒழியுமா இல்லையா என்பது ஊழலை நாம் எப்படி பார்க்கிறோம் என்பதை பொறுத்தது. ஊழல் என்பது வெறும் சட்ட ரீதியான நிதி ஒழுங்கின்மை – லஞ்சம் சார்ந்ததா அல்லது வெளிப்படையாக பளிச்சென்று தெரியும் ஏற்றத் தாழ்வுமிக்க சமூகத்தில் நடைபெறும் பணப் பரிமாற்றம் வழியாக அதிகாரமானது தொடர்ந்து சிறுபான்மையிலும் சிறுபான்மையாக இருப்பவர்களின் கரங்களில் குவிந்து வருவதை குறிக்கிறதா?

உதாரணமாக வணிக வளாகங்கள் நிரம்பிய நகரத்தில் தெருவில் கூவிக் கூவி விற்பது தடை செய்யப்பட்டுள்ளதாக கற்பனை செய்து கொள்வோம். தெருவில் கூவி விற்பவர்களின் வாடிக்கையாளர்கள் வணிக வளாகங்களில் விற்கப்படும் பொருட்களை வாங்கும் அளவுக்கு ‘தகுதி’ படைத்தவர்கள் அல்லர். எனவே அவர்களுக்கு தேவையான பொருட்களை தெருவில் விற்பவர்களிடமிருந்து அவர்கள் வாங்கிக் கொள்கிறார்கள். இந்த ‘சட்டப்புறம்பான’ வியாபாரத்துக்காக தெருவில் கூவிக் கூவி விற்பவர், நடைபாதை காவலருக்கும் நகராட்சியை சேர்ந்தவருக்கும் ஒரு தொகையை லஞ்சமாக கொடுப்பார். இது அவ்வளவு பெரிய கொடுமையா? எதிர்காலத்தில் ஜன் லோக்பாலின் பிரதிநிதிக்கும் சேர்த்து அவர் ஒரு தொகையை கொடுக்க வேண்டியிருக்குமா? அடித்தட்டு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கான தீர்வுகள், அமைப்பு ரீதியாகவே உறைந்துள்ள ஏற்றத்தாழ்வுகளை களைவதில் அடங்கியிருக்கிறதா அல்லது ஏற்றத்தாழ்வுகளுக்கு கட்டுப்பட்டு இணங்கிப் போகச் செய்யும் இன்னொரு அதிகார அமைப்பை உருவாக்குவதில் இருக்கிறதா?

அண்ணா ஹசாரேவின் போராட்டத்தில் இடம் பிடித்திருக்கும் முழக்கங்கள், சைகைகள், நடன அமைப்புகள், தேசிய வெறி, காற்றில் அழகாக அசைந்தாடும் தேசியக்கொடிகள் ஆகியவை அனைத்தும் இட ஒதுக்கீடு எதிர்ப்பு போராட்டங்கள், உலககோப்பை வெற்றி ஊர்வலம், மற்றும் அணுகுண்டு சோதனை வெற்றிக் கொண்டாட்டங்களிலிருந்து கடன் வாங்கப்பட்டவை; அவற்றை நினைவுபடுத்துபவை. இவையெல்லாம் அண்ணாவின் உண்ணாவிரதத்தை ஆதரிக்கவில்லையென்றால் நாம் உண்மையான இந்தியர்கள் இல்லையென்று நம்மை நோக்கி எச்சரிக்கின்றன. நாட்டில் இதைத்தவிர வேறு எதுவும் உருப்படியான செய்தி இல்லை என்பதாக 24 மணி நேர செய்தி ஊடகங்கள் முடிவு செய்துவிட்டன போலும்.

‘இந்த உண்ணாவிரதம்’ சர்வநிச்சயமாக மணிப்பூரில் ஒருவரை சந்தேகப்பட்டாலே இராணுவத்துக்கு அவரை கொல்ல அனுமதியளிக்கும் AFSPA என்ற அடக்குமுறைச் சட்டத்தை திரும்ப்ப் பெற வலியுறுத்தி 10 வருடங்களுக்கும் மேலாக உண்ணாவிரதம் இருக்கும் ஜரோம் சர்மிளாவின் போராட்டத்தைப் போன்றதல்ல. (இன்றும் ஐரோம் சர்மிளாவுக்கு பலவந்தமாக உணவு செலுத்தப்படுகிறது). கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து பத்தாயிரக்கணக்கில் கிராம மக்கள் தொடர்ந்து வரிசையாக நடத்தி வரும் உண்ணாவிரதம் போன்றதும் அல்ல.

(ஹசாரேவின் உண்ணாவிரதத்தை ஆதரித்து ராம்லீலா மைதானத்தில் குழுமியிருக்கும்) ‘மக்கள்’, ஐரோம் சர்மிளாவின் உண்ணாவிரதத்தை ஆதரிக்கும் மணிப்பூர் மக்களின் உணர்வுகளை கொண்டவர்களல்ல. ஜெகத்சிங்பூர் அல்லது கலிங்காநகர் அல்லது நியாம்கிரி அல்லது பாஸ்டர் அல்லது ஜெய்தாபூரில் ஆயுதமேந்திய காவலர்களையும், சுரங்கக் கொள்ளையர்களையும் அன்றாடம் எதிர்கொள்ளும் ஆயிரக்கணக்கான சாதாரண மக்கள் போன்றவர்களுமல்ல. போபால் விஷவாயு கசிவினால் பாதிக்கப்பட்ட மக்களோ அல்லது நர்மதா அணையினால் இடம்பெயர்ந்த மக்களோ கூட அல்ல. அல்லது நொய்டாவின் விவசாயிகள் போலவோ அல்லது பூனா/அரியானா அல்லது நாட்டின் எந்தபகுதியிலாவது தங்கள் நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிராக போராடி வரும் விவசாய மக்களும் அல்ல.

‘இந்த மக்கள்’, ரசிகர் பட்டாள மக்கள். தனது ஜன் லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து சட்டமாக்கவில்லை என்றால் உண்ணாவிரதம் இருந்து உயிரை மாய்த்துக்கொள்வேன் என்று ஒரு 74 வயது முதியவர் மிரட்டுவதை கண்குளிர பார்க்கும் கண்களுடன் வந்திருக்கும் ‘மக்கள்’. இயேசு கிறிஸ்து, அப்பத்தையும் மீனையும் பன்மடங்கு பெருக்கி பசித்தவர்களுக்கு உணவளித்தது போல், பல ஆயிரக்கணக்கான மக்கள் நமது தொலைக்காட்சி ஊடகங்களால் பெருக்கி காட்டப்படுகிறார்கள். ‘லட்சக்கணக்கான குரல்கள் ஒலித்தன’ என்கிறார்கள் நம்மிடம். ‘அண்ணாதான் இந்தியா’வாம்.

மக்களின் குரல் என்றும் புதிதாக வார்த்தெடுத்த புனிதர் என்றும் சித்தரிக்கப்படும் இந்த மனிதர் உண்மையில் யார்? விசித்திரம் என்னவென்றால் இதுவரை இவர் இந்த நாட்டில் பற்றி எரியும் எந்தப் பிரச்னை குறித்தும் கருத்து சொல்லி நாம் கேட்டதில்லை. அவரது ஊருக்கு அருகாமையில் நிகழும் விவசாயிகளின் தற்கொலைகளைப் பற்றியோ அல்லது சற்று தொலைவில் நடக்கும் பசுமை வேட்டைப் பற்றியோ இவர் எதுவும் பேசியதில்லை. சிங்கூரைப் பற்றியோ, நந்திகிராம், லால்கர் அல்லது போஸ்கோ விவசாயிகளைப் பற்றியோ அல்லது சிறப்பு பொருளாதார மண்டலங்களால் எதிர்காலம் சூன்யமானவர்களைப் பற்றியோ இவர் முணுமுணுத்தது கூட இல்லை. மத்திய இந்தியாவின் வனப் பகுதிகளில் இராணுவத்தை பரவி நிறுத்த அரசு திட்டமிட்டிருந்த நேரத்தில், இந்திய அரசின் நோக்கம் குறித்தெல்லாம் அவர் எந்த கவலைகளும் வெளியிட்டதில்லை.

ஆனால், ராஜ் தாக்கரேவின் இனவெறிக் கொள்கையான ‘மராட்டியம் மராட்டியர்களுக்கே’ என்ற மாராத்திய பாசத்தை ஆதரிக்கிறார். குஜராத்தை ‘வளர்ச்சி மாநிலம்’ என்று வியந்தோதியவர், 2002ல் இஸ்லாமிய மக்கள் கொன்றொழிக்கப்பட்டது குறித்து எதுவும் சொல்லவில்லை. (இதையொட்டி சில கண்டனக் குரல்கள் எழுந்ததும் தனது வார்த்தைகளை அண்ணா திரும்பப் பெற்றுக் கொண்டாரே தவிர, உண்மையான தனது பாராட்டு மனநிலையை அல்ல)

இவ்வளவு இரைச்சல்களுக்கு இடையிலும் அறிவுத் தெளிவுடைய பத்திரிக்கையாளர்கள் தங்கள் கடமையை எப்படி உணர்ந்து செய்வார்களோ அப்படியே உண்மையான சில பத்திரிகையாளர்கள் பணியாற்றுகிறார்கள். அதனால்தான் ஆர்எஸ்எஸ் உடனான அண்ணாவின் பழைய பாசப்பிணைப்புக் கதையை நாம் அறிய முடிகிறது. அண்ணாவின் கிராம சமூகமான ‘ராலேகான் சித்தி’யில் கடந்த 25 வருடங்களாக கிராம பஞ்சாயத்துகளோ அல்லது கூட்டுறவு சங்க தேர்தல்களோ நடைபெற்றதேயில்லை என்று அக்கிராமத்தை ஆய்வு செய்த முகுல் ஷர்மா சொல்வதை கேட்க முடிகிறது. ‘ஹரிஜன்’களை குறித்து அண்ணாவின் மனபாவத்தை அறிய முடிகிறது: ‘ஒவ்வொரு கிராமமும் ஒரு சக்கிலியனை, கொல்லனை, குயவனைக் கொண்டிருக்க வேண்டும் என்பது மகாத்மா காந்தியின் கனவு. அவர்கள் தத்தமது கடமையை செய்துகொண்டிருக்க வேண்டும். அப்போதுதான் ஒரு கிராமம் தன்னிறைவு பெறும். இதைத்தான் ராலேகான் சித்தியில் நாங்கள் நடைமுறைபடுத்தியிருக்கிறோம்’.

‘அண்ணாவின் குழுவினர்’ (டீம் அண்ணா), இட ஒதுக்கீடு திட்டத்தை எதிர்ப்பவர்களான யூத் ஃபார் ஈக்வாலிட்டி என்ற அமைப்பினருடன் இணைந்திருக்கிறார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறதா? கோகோ – கோலாவினாலும் லேமான் பிரதர்சாலும் மிக தாராளமாக நிதியுதவி செய்யப்பட்ட பல தன்னார்வக் குழுவினர்தான் இந்த பிரச்சார போராட்டத்தை முன்னின்று நடத்துகிறார்கள். ‘அண்ணா குழு’வின் புகழ் பெற்ற நபர்களான, அர்விந்த் கேஜ்ரிவால், மனீஷ் சிசோடியா-வால் நிர்வகிக்கப்படும் ‘கபீர்’ அமைப்புக்காக கடந்த மூன்று வருடங்களில் போர்டு பவுண்டேசனிடமிருந்து 400,000 டாலர்களை பெற்றிருக்கிறார்கள். ‘ஊழலுக்கெதிரான இந்தியா’ பிரச்சாரத்துக்கு நிதி வழங்கியவர்களின் பட்டியல் இன்னும் ஆச்சரியமான அதிர்ச்சியை தரக்கூடியது. சொந்தமாக அலுமினிய சுரங்கங்கள் வைத்திருக்கும் இந்திய நிறுவனங்கள், சிறப்பு பொருளாதார மண்டலங்களை கையகப்படுத்தி இருப்பவர்கள், ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்பவர்கள், பல்லாயிரக்கணக்கான கோடிகளுக்குச் சொந்தக்காரர்களான அரசியல்வாதிகளுடன் நெருக்கமாக இருப்பவர்கள் என்று அனைவரும் அடக்கம். இதில் பலர் மீது ஊழலுக்காகவும் மற்றும் வேறு சில குற்றங்களுக்காகவும் விசாரணை இப்போதும் நடந்துக்கொண்டிருக்கிறது.

ஜன் லோக் பால் மசோதா சூடுபிடிக்கத் தொடங்கிய நேரத்தை நினைவுபடுத்தி பாருங்கள். உலக அரங்கில் விக்கிலீக்சின் மூலம் அதிர்ச்சியளிக்கும் உண்மைகள் வெளிவந்துக் கொண்டிருந்தது. இந்திய அளவில், முக்கியமான பன்னாட்டு நிறுவனங்கள், உயர் பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள் பலர், 2ஜி உள்ளிட்ட பிரமாண்டமான ஊழல்களில் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் செய்திகள் அம்பலப்படுத்தியிருந்தன. அதோடு, காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த அரசியல்வாதிகள், பொதுச்சொத்தின் ஆயிரக்கணக்கான கோடிகளை பல்வேறு வழிகளில் கபளீகரம் செய்ததும் வெளிச்சத்துக்கு வந்திருந்தன.

இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக, தரகு வேலை செய்யும் பத்திரிகையாளர்களின் முகத்திரை கிழிந்ததுடன் கார்ப்பரேட் இந்தியாவின் முக்கிய தலைவர்களும் தண்டிக்கப்படக்கூடிய ஒரு தருணம் நெருங்கி இருந்தது. ஊழலுக்கெதிரான போராட்டத்துக்கு இதைவிட சரியான நேரம் கிடைக்குமா என்ன?

அரசாங்கம் தனது கடமைகளிலிருந்து விலகிக்கொள்ள, கார்ப்பரேட்டுகளும் தன்னார்வக் குழுவினரும் அந்த இடங்களில் தங்களை நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள் (தண்ணீர் வசதி, மின்சாரம், போக்குவரத்து, தொலைதொடர்பு, சுரங்கங்கள், மருத்துவம், கல்வி); தனியாருக்குச் சொந்தமான ஊடகங்கள் தங்களது முழு ஆற்றலையும் செலவழித்து பொது மக்களின் சிந்தனையை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர முயற்சிக்கிறார்கள். இந்த கார்ப்பரேட்டுகள், ஊடகங்கள், தன்னார்வ குழுவினர்கள் தாமாகவே ஜன் லோக் பாலின் வரம்புக்குள் வருவார்கள் போலிருக்கிறதே என்று நினைத்தோம். ஆனால், அவ்வாறு இல்லையாம். அவர்களுக்கு முழுமையான விலக்கு அளிக்கிறது ஜன் லோக்பால் மசோதா.

அரசின் ஊழலுக்கும், கறைபடிந்த அரசியல்வாதிகளுக்கும் ஆப்படிக்கும் போராட்டத்தில், குற்றவாளிகள், மற்ற எல்லோரையும் விட அதிகமாக குரலெழுப்புவதன் மூலம் தங்களை தாங்களே அதன் பிடியிலிருந்து சாதுர்யமாக விடுவித்துக்கொள்கின்றனர். அதைவிட மோசம் இரண்டாம் கட்ட சீர்திருத்தம் என்ற பெயரில் பொது வட்டத்திலிருந்து அரசாங்கம் இன்னமும் பின்வாங்க வலியுறுத்தி அதன் மீது கணைகளை வீசுகிறார்கள். அது நடந்தால்தான் பொது நிறுவனங்கள் மேலும் தனியுடமை ஆகும். பொது கட்டமைப்புகளில் தனியார் இன்னமும் கை வைக்க முடியும். இந்தியாவின் இயற்கை வளங்களை கபளீகரம் செய்ய முடியும். அந்தக் கட்டம் வரும்போது, கார்ப்பரேட் ஊழல் நியாயப்படுத்தப்பட்டு சட்டமாக்கப்பட்டுவிடும். அதற்கு ‘தரகு கமிசன்’ என்றும் பெயர் வைக்கப்பட்டுவிடும்.

20 ரூபாயில் தங்கள் அன்றாட வாழ்க்கையை கடத்தும் 83 கோடி மக்களுக்கு, இந்த மசோதாவினால் உண்மையாகவே ஏதும் பயனிருக்கிறதா? இது அவர்களை மேலும் ஏழ்மைக்கும் வறுமைக்கும் போராட்டத்தை நோக்கியும் தள்ளுமே தவிர வேறு எந்த பயனுமில்லை.

மக்களின் சார்பாக கிரிமினல்களும் கோடீஸ்வர அரசியல்வாதிகளுமே நிரம்பியிருக்கும் பாராளுமன்றங்களின் முழுதோல்விதான் இந்த அருவெறுக்கத்தக்க நெருக்கடியை போலியாக உப்பிபெருக்குகிறது. சாதாரண மக்களால் இங்கு ஒரேயொரு ஜனநாயக அமைப்பைக் கூட நெருங்கமுடியாது.

தேசக்கொடி ஒயிலாக அசைவதைப் பார்த்து மனம் மயங்கிவிடாதீர்கள். நமது இறையாண்மையை கார்ப்பரேட்டுகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக நடத்தப் போகும் யுத்தத்துக்குள் நாம் இழுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த யுத்தம் சொந்த நலனுக்காக ஆப்கானிஸ்தானில் யுத்தபிரபுக்கள் நிகழ்த்திய யுத்தம் போன்ற உக்கிரத்தை கொண்டதாக இருக்கும். இந்தியாவில் இதைதான் நாம் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

________நன்றி: வினவு _________________________________________

சனி, 2 ஏப்ரல், 2011

யார் தமிழர்? Dr.ஷாலினி


தமிழர்கள் என்றால் யார்? அவர்களை எப்படி இனம் காணலாம்?


”அட, இதில் யோசிக்க என்ன இருக்கிறது. தமிழ் நாட்டில் வாழும் எல்லோரும் தமிழர்கள் தான்,” என்று பட்டென சொல்ல தோன்றினால், “அப்படியானால் தமிழ் நாட்டில் வாழும் உருது பேசுபவர் தமிழரா?” “வெளி நாடுகளில் வாழும் தமிழ் பேசும் மனிதர்கள் தமிழர்கள் இல்லையா?” என்ற கேள்வியும் வரும்.

அப்படியில்லை, அவர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும், தமிழ் பேசுபவராக இருந்தால் அவர் தமிழரே, என்று விளக்கம் சொன்னலோ, அப்படியானால் நெதர்லாந்துகாரரான கமில் ஸ்வெலிபில் எனும் தமிழ் அறிஞரும் தமிழர் தானா? ஒரு சாராசரி தமிழனை விட, அதிகம் தமிழை பற்றி தெரிந்துவைத்திருக்கிறவர் ஆயிற்றே. அப்படியானால் அவர் தமிழர் தானே? என்று வாதிட்டாலோ, “அதெல்லாம் இல்லை, அவருக்கு எவ்வளவு தமிழ் தெரிந்திருந்தாலும், அவருடைய அசல் தாய் மொழி டச்சு தான், அவர் சொந்த விருப்பத்திற்க்காக அவர் தமிழ் கற்றார்…. தேர்சி பெற்றார். அவர் தமிழுக்காக, எவ்வளவு சாதித்திருந்தாலும் அவர் தமிழர் ஆக மாட்டார். காரணம், அவர் தாய் மொழி தமிழே இல்லை” என்று பதில் வரும்.

இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. ஒரு வேளை, தமிழ் பெற்றோருக்கு பிறந்தும், பல காலம் வெளி நாட்டில் வாழ்ந்ததால் தலைமுறை தலைமுறையாக, ஆங்கிலம், ஜெர்மன், அல்லது, ஃபிரென்ஞ்ச் மட்டுமே பேசும் தமிழ் தெரியாத மனிதராக இருந்தால், அப்போது அவர் தமிழரில்லையா? உதாரணம்: இன்று ஃபிஜி, மொரீஷியஸ், செஷல்ஸ், தென்னாப்பிரிக்கா, மேற்கு இந்தீஸில் வாழும் பல தமிழ் வம்சாவழியினருக்கு தமிழே தெரியாதே. அவர்களின் தாய் மொழி என்று அவர்கள் நினைப்பது, அந்தந்த ஊரின் மொழியை மட்டும் தானே.

அல்லது, வேலை நிமித்தமாக தமிழ் நாட்டில் வசிக்க நேர்ந்ததால், தொன்று தொட்டு பல தலை முறைகளாக தமிழையே பேசிக்கொள்கிறார்கள் …..உதாரணத்திற்கு இன்று தமிழ்நாட்டில் வாழும் பல ரெட்டிமார்கள் வீட்டிலும், மனதிற்குள்ளும் தமிழை தான் பேசிக்கொள்கிறார்கள். அவர்களுக்கு தெலுங்கே தெரிவதில்லை…..அப்படியானால் அவர்கள் தமிழர்களா?

அப்படி இல்லை, தமிழ் தெரியுமோ தெரியாதோ, அது அவ்வளவு முக்கியம் இல்லை. அவர்களின் பெற்றோர்கள் எந்த மொழியை பேசும் இனத்தை சேர்ந்தவர்கள் என்பது தான் முக்கியம். பெற்றோரின் பூர்வீக மொழி மட்டும் தான் அடையாளம் என்றால், என் தாய் தமிழச்சி இல்லை, வேற்றூ மொழிகாரி என்றால், நான் தமிழர் இல்லையா?

இல்லை, உன் தந்தை தமிழராக இருந்தால் போதும், யாராவது ஒரு பெற்றோர் தமிழராக இருந்தாலே தமிழர் என்ற அந்தஸ்த்தை பெறலாம், என்றாலோ, அடுத்து வரும் கேள்வி, “அப்படியானால் தமிழ் என்பது மொழியின் அடையாளமா? இனத்தில் அடையாளமா?”

தமிழ் எனும் மொழியை யார் வேண்டுமானாலும் கற்றுக்கொண்டு பேசலாம், காந்திகூடத்தான் தென் ஆப்பிரிக்கா சிறையில் இருந்த போது தமிழை கற்றுக்கொண்டார், அதற்காக அவர் தமிழராகிவிட முடியுமா? அதெல்லாம் இல்லை, தமிழ் என்பது ஒரு இனம்.

சரி, இனம் என்றால் என்ன? ஒரு குறிப்பிட்ட இடத்தில் வசித்து, ஒரே ஆரம்ப மொழியை பேசி, ஒருமித்த கலாச்சாரம், கருத்தாக்கம், மரபு, நம்பிக்கை, ஆகியவற்றை பின் பற்றும் ஒரு குழுவை தான் இனம் என்போம். இப்படி ஆரம்பித்த இனம், பிறகு வெவ்வேறூ பாதைகளை தேடி பிரிந்து போனாலும், அவர்கள் ஆரம்பத்தில் ஒரே குடும்பமாக இருந்ததால், கடைசி வரை அவர்கள் சகோதரர்களே…..அதனால் தான் தமிழர், தெலுங்கர், மலையாளி, துலு, கன்னடக்காரர், என்ற மேலோட்டமான பிரிவினைகளை தாண்டி, அனைத்து திடராவிடமொழி பேசுபவர்களும் ஒரே கூட்டம் தான். காரணம் இவரக்ள் எல்லோருமே ஆரம்ப காலத்தில் ஒரே மொழியை பேசி, ஒரே இடத்தில் வசித்து வந்த ஒரே குடும்பத்தவர் தான்.

அது சரி, ஆனால் இந்த திராவிட இனம் என்பது எங்கே, எப்போது, எப்படி தோன்றியதாம்? அது கல் தோன்றி மண் தோன்றும் காலத்துக்கு முன்னால் எல்லாம் தோன்றியது என்று நாம் மிகை படுத்தி, “முதலில் தோன்றிய மூத்த குடியாக்கும்” என்றெல்லாம் கதை விட்டுக்கொண்டிருக்க முடியாது. காரணம் இன்று எல்லா கூற்றூகளையும் அறிவியல் ரீதியாக பரிசோதிக்க முடியும்! மானுடம் என்ற ஜீவராசி தோன்றியே ஒரு மில்லியன் ஆண்டுகள் தான் ஆகின்றன, என்பது அறிவியல் உண்மை, அப்புறம், இந்த கல் தோன்றி, மண் தோன்றா காலத்து கதைகளை சொன்னால், அது அபத்தம் ஆகிவிடுமே!

கதை எல்லாம் எதுவுமில்லை, நிஜம் இது தான்: கிட்ட தட்ட ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் சிந்து சமவெளியில் நாகரீகத்தை தோற்றுவித்தவர்கள். ஆஸ்கோ பார்போலா என்ற மொழியியல் புணரும், ஐராவதம் மஹாதேவன் அவர்களும் தெள்ள தெளிவாக சொல்லி இருக்கிறார், சிந்து சவவெளி காரர்களின் எழுத்து ஆதி திராவிட எழுத்துவடிவம் தானாம்! என்றாலும், அடுத்த கேள்வி எழுகிறது…..சிந்து சமவெளிக்கு திராவிடர்கள் எப்படி வந்து சேர்ந்தார்கள், அதற்கு முன்னால் அவர்கள் எங்கே இருந்தார்கள்?

எல்லா மனிதர்களும் ஆரம்பத்தில் தென் கிழக்கு ஆஃப்ரிக்காவில் தான் தோன்றினார்கள். அங்கே தான் ஹொமினினே என்கிற ஒரு வாலற்ற குரங்கு இனம் பரிணாம வளர்ச்சியில் உரு மாறிக்கொண்டே இருந்தது. இந்த ஹோமினினே குரங்கு தான் கிட்ட தட்ட ஐந்தாறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன் சிம்பான்சி, போனோபோ, ஆஸ்திரலோபிதிகஸ் என்கிற மூன்று வகைகளாக பிரிந்தது. இதில் ஆஸ்திரலோபிதிகஸ் என்கிற வகை மேலும் மேலும் பரிணாம வளர்ச்சிக்கு உட்பட்டு, உருமாறிக்கொண்டே போய், கிட்ட தட்ட ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இப்போது இருக்கும் மனித இனமான ஹோமோ சேப்பியன்ஸ் பேப்பியன்ஸ் என்கிற இனமாக உருவானது. இந்த இனம் தோன்றியது தென்கிழக்கு ஆஃப்ரிக்காவில் தான். ஆரம்பத்தில் இந்த இனத்தில் ஜனத்தொகை சில நூறுகளாக மட்டுமே இருந்தன. இவை ஒரே மொழியை பேசின. ஒரே விதமான நம்பிக்கைகளை கொண்டிருந்தன. ஒரே விதமான மரபுகளை பின்பற்றின. உணர்ச்சிகள், தேவைகள், ஆசைகள், எண்ணங்கள், அவ்வளவு ஏன், உடல் மற்றும் மனநலநோய்கள் கூட இவற்றுக்கு ஒரே மாதிரி தான் இருந்தன. இந்த இனம் உணவு தேடி, நாடோடிகளாய் பல புதிய திறந்தவெளிகளை நோக்கி பயணித்தன. இப்படி பரவிய இந்த மனித கூட்டம், கடந்த பத்தாயிரம் ஆண்களகாய், பல திக்குகளுக்கு பிரிந்து போயின. போன இடத்தில் புது புது உணவுகளை உட்கொண்டு, புது புது வாழ்க்கை முறைகளை பின்பற்றி, மொழியை மாற்றி மாற்றி பேசினாலும், இன்று வரை இவை அனைத்துமே ஒரு இனம் தான். உலகின் எந்த கோடியில் பிறந்த மனிதருக்கும், வேறு எந்த கோடியில் பிறந்த அடுத்தவர் ரத்த/உருப்பு தானம் செய்ய முடியும், இருவரது திசுகளும் பொருத்தமாய் இருந்தால். இதை விட பெரிய அதிசயம், இன்றும் மனிதர்களுக்கும் போனோபோ குரங்குகளுக்கு மரபணுக்கள் கிட்ட தட்ட 98% ஒரே மாதிரி இருக்கின்றனவாம், பொனோபோக்களின் உதிரத்தை மனிதர்களுக்கு செலுத்த முடியுமாம். பொனோபோக்களுக்கு மனிதர்களுக்கு இனகலப்பு செய்தால் குழந்தைகூட பிறக்கலாம் என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். ஐந்தாறு மில்லியன் வருடங்களுக்கு முன்பே பிரிந்து போன சகோதர இனக்களான பொனோப்போவும் மானுடமும் இத்தனை ஒற்றூமைகள் இன்னும் இருக்கின்றன என்றால், பத்தே பத்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உணவை தேடி போனதில் பிரிந்து போன மனித வர்கம் இன்னும் எத்தனை நெருக்கமானதாக இருக்க வேண்டும்!

அதனால் தான் எத்தனை மொழிகளை நாம் பேசினாலும் எல்லா மொழிகளுமே தாயை, “மா” என்று தான் அழைக்கின்றன. அதனால் தான் நெதர்லாந்தில் பிறந்தாலும் கமில் ஸ்வெலிபில், மாதிரியான ஆசாமிகளுக்கு தமிழ் மீது ஆர்வம் வருகிறது. ஆக, எல்லா மனிதரக்ளும் அடிப்படையில் ஒன்று தான் என்றால் தமிழர்கள் என்பவர்கள் யார்?

ஆஃப்ரிக்காவில் தோன்றி, சிந்துசமவெளியில் நாகரீகம் கண்டு, திராவிட மொழியையும், கலாச்சாரத்தையும் தோற்றூவித்து, பல ராஜியங்கள் கண்டு, இன்னும் இன்னும் பல புதிய நிலபறப்புகளுக்கு பரவிக்கொண்டு இருக்கும் அந்த இனம் தான் தமிழ் இனம். இந்த பெரிய பயணத்தில் அவர்களின் மொழி மாறி இருக்கலாம், அவர்களின் வாழ்க்கை முறை மாறி இருக்கலாம்….ஆனால் தொடர்ந்து பயணிப்பதும், பிழைப்பதும், புதிய சூழலுக்கு தக்கபடி தங்களை மாற்றிக்கொண்டே போவதும் தான் இவர்களின் அடையாளங்கள். இவற்றை வைத்து இவர்களை நீங்கள் இனம் காணலாம்…..இப்பது சொல்லுங்கள் பார்ப்போம், தமிழர்கள் என்றால் யார்?

சனி, 2 அக்டோபர், 2010

பிளாட்டோ




பிளாட்டோ & அரிஸ்டாட்டில்
அரிஸ்டாட்டில்
பிளாட்டோ

திங்கள், 26 ஜூலை, 2010